இலங்கையில் தீவிரமடையும் கொரோனா அபாயம்..! நாடு மீண்டும் முடக்கப்படுமா?

#SriLanka
Nila
2 years ago
இலங்கையில் தீவிரமடையும்  கொரோனா அபாயம்..!  நாடு மீண்டும் முடக்கப்படுமா?

தேசிய தொற்றுநோயியல் வைத்தியசாலையில் நோயாளர் விடுதிகள் நிரம்பி வழிவதாகவும், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் ஒட்சிசன் தேவை அதிகரிப்பதாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்திய கலாநிதி அசித்த அத்தநாயக்க கூறியுள்ளார். 

இதேவேளை ஹம்பகா மாவட்டத்தில் அதிக தொற்று அபாயம் உள்ளதாகவும் அடுத்த படியாக கொழும்பு மாவட்டத்தில் தொற்று அபாயம் அதிகம் உள்ளதாகவும் கொவிட் கட்டுப்பாட்டுக்கான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே சுட்டிக்காட்டியிருக்கின்றார். 

மேலும் நாட்டிலுள்ள சிகிச்சை பிரிவுகளில் 6025 கட்டில்கள் பயன்படுத்தப்படும் நிலையில் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தால் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வைத்தியசாலைகள் நிரம்பி வழிவதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை, 

ஒட்சிசன் தேவை கடந்த சில மாதங்களாக வழங்கப்பட்ட அளவிலேயே தொடர்ந்தும் வழங்கப்படுகிறது. அதன் தேவை அதிகரிக்கவில்லை. மேலும் நாடு முடக்கப்படுமா? என்ற சிந்தனையே எமக்கு எழு கூடாது. இந்த நாட்டின் பிரஜைகளாக சுகாதார நடைமுறைகளை மதித்து எமது பொறுப்பை உறுதி செய்யவேண்டும்.

நாடு பாரிய சமூக, பொருளாதார வீழ்ச்சியின் விளைவுகளை கண்டு கொண்டிருக்கும் நிலையில் முடக்கம் என்பதை யாரும் எதிர்பார்க்ககூடாது. பல மில்லியன் மக்களில்  வெகு சிலரே தொற்றுக்குள்ளாகிறார்கள். என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் கூறியிருக்கின்றார். 

இதேவேளை அடுத்துவரும் சில மாதங்களில் நிலைமை மோசமாகலாம். ஆபத்து அதிகரிக்கலாம். என நாங்கள் அச்சப்படுகின்றோம். நாடு தற்போதுள்ள நிலையில் ஒரு முடக்கநிலை ஏற்படுமாக இருந்தால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை மக்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். 

மக்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து கொள்ளவேண்டும். என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர், வைத்திய நிபுணர் பிரசாத் கொலம்பகே கூறியிருக்கின்றார்.