இரசாயன உரங்களுக்குதடை: நெல் விளைச்சலில் பாரியளவு வீழ்ச்சி
இலங்கையில் இரசாயன உரங்களுக்கு தடை விதிக்கப்பட்டமையினால் நெல் விளைச்சல் பாரிய அளவு வீழ்ச்சி கண்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்த நிலமை தொடருமானால் எதிர்காலத்தில் விவசாயிகளின் நிலை மேலும் மோசமாகிவிடும் எனவும் தெரிவிக்கின்றனர் .
இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது பெரும்போக நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் நெல் அறுவடை செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பயிர்ச்செய்கைகளுக்குரிய இரசாயன உரமின்மை மற்றும், கிருமி
நாசினி,எரிபொருள் பற்றாக்குறை, விலையேற்றம் போன்ற காரணங்களினால் இம்முறை அறுவடையில் பரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
நெற்செய்கை விளைச்சலில் பாரிய அளவு வீழ்ச்சியடைந்துள்ள சூழலில், அறுவடைக்கான கூலி அதிகரித்திருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதனைவிட அறுவடை செய்யப்பட்ட நெல்லினை சந்தைப்படுத்துவதிலும் பல்வேறு இடர்பாடுகளுக்கு முகங்கொடுப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.