பிரபாகரனின் படத்தை ஏற்றிவருக்கு பிணை
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, புளியங்கண்டலடி வாகரையைச் சேர்ந்த குடும்பஸ்தரான கு.விஜயதாஸ (வயது 30) பிணையில் இன்று (27) விடுவிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எச்.எம்.எம்.பசில் முன்னிலையில், வாழைச்சேனை மாவட்ட நீதிமன்றத்தில் இவ்வழக்கு நேற்றுக்காலை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே, நிபந்தனை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தலைவரின் உருவம் அடங்கிய புகைப்படத்தை தன்னுடைய பேஸ்புக்கில் பதிவிட்டதாக குற்றஞ்சாட்டி, 2020.11.27 அன்று வாகரை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். கடந்த ஒருவருடமும் 2 மாதங்களாக தடுப்புக்காலில் இருந்துள்ளார்.
இந்நிலையில், சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அத்துடன் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் வாகரை பொலிஸ் நிலையத்துக்கு காலை 9 மணிமுதல் 12 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் சென்று கையொப்பமிட வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் சட்டத்தரணிகளான எம்.எச்.எம்.றம்சீன் ,ஹாலிப் றிபான் அகியோர் பிரதிவாதி தரப்பில் தொடர்ச்சியாக ஆஜராகி வாதாடிவந்தனர். இவர்களுடன், சட்டத்தரணி ரி.ஜெயசிங்கம் இணைந்துகொண்டார்.