கட்டார் துப்பாக்கிச் சூட்டில் இலங்கையர் உயிரிழப்பு
கட்டார் − டோஹா பகுதியிலுள்ள தொடர்மாடி குடியிருப்புக்கு அருகே நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நேற்று முன்தினம் (26) இடம்பெற்றதாக டோஹா நியூஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
தொடர்மாடி குடியிருப்புக்குள் நுழைவதற்கு இளைஞர் ஒருவர் முயற்சித்த போது, அடையாள அட்டையை காண்பிக்குமாறு, அங்கு கடமையிலிருந்த காவலாளி கோரியுள்ளார்.
இதையடுத்து, குறித்த இளைஞனுக்கும், காவலாளிக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுவடைந்த நிலையில், குறித்த இளைஞனினால் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த காவலாளி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் இலங்கையர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் கைது செய்யப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைகளை டோஹா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.