இலங்கையில் 43 வருடங்களின் பின்னர் திருத்தப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டம்!

#SriLanka #G. L. Peiris
Nila
2 years ago
இலங்கையில் 43 வருடங்களின் பின்னர் திருத்தப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டம்!

இலங்கையில் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் நிலைமாற்று கால நீதிச் செயற்பாடுகளில் தொடர்ந்தும் இழுத்தடிப்புச் செய்துவரும் இலங்கை அரசாங்கத்திற்கு ஜெனீவா கூட்டத் தொடர் பீதி தொற்றுக்கொண்டதை எடுத்துக்காட்டும் வகையில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பிரீஸ், வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்து கலந்துரையாடிய சம்பவம் பதிவாகியுள்ளது.

இலங்கையில்  நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுவரும் முயற்சிகள் தொடர்பிலும் பயங்கரவாத தடைச் சட்டத்தை சர்வதேச நியமங்களுக்கு அமைய திருத்தும் செயற்பாடுகள் தொடர்பிலும் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பிரீஸ் எடுத்துரைத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத் தொடர் பெப்ரவரி இறுதி வாரத்தில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கையின்  மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான முன்னேற்றம் தொடர்பான தகவல்களைப் பகிரும் வகையில் கொழும்பை தளமாக கொண்ட இராஜதந்திரிகளுடனான சந்திப்பு வெளிவிவகார அமைச்சில் நேற்று நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பிரீஸ், பொறுப்புக்கூறல், நீதி மறுசீரமைப்பு மற்றும் அர்த்தமுள்ள நல்லிணக்கம் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு உள்நாட்டு நிறுவனங்களின் செயற்பாடுகளினூடாக அரசாங்கம் கணிசமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

43 வருடங்களின் பின்னர் சர்வதேச நியதிகள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு அமைவாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை கொண்டுவரும் நோக்கத்துடன் அந்தச் சட்டமானது திருத்தப்பட்டு வருவதாக அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

உத்தேச திருத்தங்கள் அடங்கிய சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் இறுதி அங்கீகாரத்திற்காக நாடாளுமன்றத்தில் சட்டமூலத்தை சமர்பிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் ஜி.எல்.பிரீஸ் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் முக்கிய திருத்தங்களில் தடுப்புக் காவல் உத்தரவு, கட்டுப்பாட்டு உத்தரவு, நீதித்துறை மீளாய்வு உத்தரவுகளை வெளிப்படையாக அங்கீகரித்தல் தொடர்பான பிரிவுகளில் திருத்தங்களை மேற்கொள்ளுதல், நீண்ட கால தடுப்புக் காவலில் வைக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான வழக்குகளை விரைவாகத் தீர்த்தல், சுதந்திரத்துக்கு இடையூறு விளைவிக்கும் பிரிவுகளை இரத்துச் செய்தல், நீதிவான்கள் மற்றும் நீதித்துறை மருத்துவ அதிகாரிகளை அணுகுவதற்கான விதிகளை வெளிப்படுத்துதல் மற்றும் அறிமுகப்படுத்துதல், தடுப்புக் காவலில் உள்ள காலத்தில் துஷ்பிரயோகம் மற்றும் சித்திரவதைகளைத் தடுத்தல், குடும்பத்துடன் தொடர்புகொள்வதற்கான உரிமை, நீண்ட கால கைதிகளுக்கு பிணை வழங்குதல் மற்றும் வழக்குகளை நாளாந்தம் விசாரணை செய்தல் போன்ற பிரிவுகளிலான திருத்தங்கள் உள்ளடங்கும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதற்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் 13 ஆவது பிரிவின் கீழ் ஆலோசனை சபையொன்றை ஸ்தாபிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவல் உத்தரவு அல்லது கட்டுப்பாட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட எவருக்கும் அந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோருவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.

மேலும், 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தண்டனை அனுபவித்து வந்த 16 விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு அரச தலைவர் மன்னிப்பு வழங்கப்பட்டதாகவும் வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

 பயங்கரவாதச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டின் கீழ் நீண்டகாலமாக நீதிமன்றக் காவலில் உள்ள கைதிகளை விடுதலை செய்வதற்கான சட்ட மற்றும் நிர்வாக நடைமுறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் அதன்பிரகாரம், 2022 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் திகதி வரை மேலும் 13 பேர் விடுதலை செய்யப்பட்டனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

தொல்பொருள் பாரம்பரிய முகாமைத்துவம் தொடர்பான அரச தலைவரது செயலணி தொடர்பில், தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களின் பிரதிநிதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜி.எல்.பிரீஸ் இதன்போது சுட்டிக்காட்டினார்.