இலங்கையில் மீண்டும் அதிகரித்த ஒமைக்ரோன் தொற்றாளர்கள்!

#SriLanka #Omicron
Nila
2 years ago
இலங்கையில் மீண்டும் அதிகரித்த  ஒமைக்ரோன் தொற்றாளர்கள்!

இலங்கையில் கொரோனா வைரஸின் ஒமைக்ரோன் பிறழ்வினால் பாதிக்கப்பட்ட மேலும் 82 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சமீபத்தி அறிக்கையின்படி, 88 மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 82 மாதிரிகள் ஒமைக்ரோன் தொற்றினாலும், 6 மாதிரிகள் டெல்டா பிறழ்வினாலும் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

“இந்த 88 மாதிரிகள் ஜனவரி 4 வது வாரத்திலிருந்து சமூகத்திலிருந்து வரிசைப்படுத்தப்பட்டன.” என மருத்துவ பீடத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.

ஒமைக்ரோன் தொற்றாளர்களில் இரண்டு முக்கிய ஓமைக்ரோன் வரிசைகளான BA.1 மற்றும் BA.2 ஆகியவற்றின் கலவையும் உள்ளடங்குகிறது.

கொழும்பு மாநகர சபை, கொழும்பு, கெஸ்பேவ மற்றும் மத்துகம ஆகிய இடங்களில் BA.1 இன் 30 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். BA.1.1 இன் 22 தொற்றாளர்கள் கொழும்பு மாநகரசபை, கொழும்பு, கெஸ்பேவ மற்றும் மத்துகமவில் கண்டறியப்பட்டுள்ளனர். BA.2 இன் 28 தொற்றாளர்கள் கொழும்பு மாநகரசபை மற்றும் கொழும்பில் கண்டறியப்பட்டனர். கொழும்பில் B.1.1.529 இன் 2 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர்.