விசமிகளால் தீ வைக்கப்பட்ட டெவோன் நீர்வீழ்ச்சி காட்டுப் பகுதி: 50 ஏக்கர்எரிந்து நாசம்

Prathees
2 years ago
விசமிகளால் தீ வைக்கப்பட்ட டெவோன் நீர்வீழ்ச்சி காட்டுப் பகுதி: 50 ஏக்கர்எரிந்து நாசம்

இனம்தெரியாத விசமிகளால் டெவோன் நீர்வீழ்ச்சிக்கு அண்மித்த காட்டுப்பகுதிக்கு  தீ வைக்கப்பட்டதன் காரணமாக நீர்வீழ்ச்சியை அண்மித்த சுற்றியுள்ள பகுதியில் சுமார் 50 ஏக்கர் வரை தீயினால் எரிந்து நாசமாகியுள்ளன.

மலையக பகுதியில் வரட்சியான காலநிலையுடன் கடும் காற்றும் நிலவி வருகிறது. பற்றைக்காடுகள் கருகி போயுள்ளதனால் தீ மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் தீயினை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவது கடினமாகவுள்ளன.

வரட்சியான காலநிலையினை அடுத்து மலையக நீர்ப்போசன பிரதேசங்களுக்கு சமீபமாக நீரேந்தும் பிரதேசங்களிலுள்ள காட்டுப் பகுதிகளுக்கு இனந்தெரியாத விசமிகளால் தொடர்ச்சியாக தீ வைத்து வருவதனால் பாரிய அளவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளன.

குறித்த பிரதேசங்களுக்கு தீ வைத்ததன் காரணமாக அப்பகுதியில் உள்ள நீர் ஊற்றுக்கள் அற்றுப்போவதுடன் சிறிய வகை உயிரினங்கள்,  பிரதேசத்திற்கே உரித்தான அரிய வகை தாவரங்கள் பெறுமதிமிக்க மரக்கன்றுகள் ஆகியன அழிவடையும் நிலையினை எதிர்நோக்கியுள்ளன.

வரட்சியான காலநிலையினை அடுத்து பல பிரதேசங்களில் தற்போது குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் தொடர்ச்சியாக வனப்பகுதிகளுக்கு தீ வைப்பதனால் இந்நிலை மேலும் அதிகரித்து நீரின்றி பல்வேறு பிரச்சினைக்களுக்கு முகம் கொடுக்க நேரிடலாம் என பிரதேச வாசிகள் சுட்டிக்காட்டுக்கின்றனர்.

இதேநேரம் நீர்போசனை பிரதேசங்களில் உள்ள காட்டுப்பகுதிக்கு தீ வைப்பதனால் தேசிய மின் உற்பத்திக்கும் பாதிப்பு ஏற்படலாம் எனவே காடுகளுக்கு தீ வைப்பவர்களை உடன் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். மிருகங்களை வேட்டையாடுவதற்கும் பொழுது போக்குக்காகவும் குறித்த காட்டுப் பகுதிகளுக்கு சில விசமிகளால் தீ வைக்கப்படுவதாக பாதுகாப்பு தரப்பு தெரிவிக்கின்றனர்.

எனவே, வனப்பகுதிகளை விசமிகளிடமிருந்து பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.