இராகலையில் வாள்வெட்டில் உயிரிழந்த நபர் : பதற்றத்தால் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

Prathees
2 years ago
இராகலையில் வாள்வெட்டில் உயிரிழந்த நபர் : பதற்றத்தால் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

இராகலை மேற்பிரிவு தோட்டத்தில் நண்பர்களுக்கிடையில் இடம்பெற்ற வாள் வெட்டு  சம்பவம் ஒன்றில் வெட்டு காயங்களுக்கு உள்ளான ஒருவர் சிகிச்சை பலன்னின்றி உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து இராகலை மேல்பிரிவு தோட்டத்தில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்தமாதம் (29) அன்று இரு இனங்களை சேர்ந்த நண்பர்களுக்கிடையில் வீதி அமைக்கும் பிரச்சினை இடம்பெற்றுள்ளது.

இதன்போது இவ் இருவருக்கும் இடையில் சண்டை ஏற்பட்டு அது கத்தி வெட்டு சம்பவமாக மாறியுள்ளது.

இந்த சம்பவத்தில்  பெரும்பான்மை இனத்தை சேர்ந்த நபர் சிறுபான்மை இனத்தை சேர்ந்த நபரை கத்தியால் வெட்டியுள்ளார்.

இதனால் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நபர் கடந்த (05) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார்.

சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான சந்திரசிரி தயாளன் வயது (30) என்ற நபரே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் கத்தி வெட்டில் ஈடுப்பட்ட நபர் கைது செய்யப்பட்டு வலப்பன நீதவான் நீதிமன்ற நீதிபதி டி.ஆர்.எஸ்.ஜினதாச முன்னிலையில் இராகலை பொலிசார் கடந்த (30) மாலை ஆஜர்படுத்தியுள்ளனர்.

இதன்போது சந்தேக நபரை விளக்க மறியலில் வைக்க உத்தரவிடப்பட்டு தற்போது சந்தேநபர் விளக்க மறியலில் உள்ளார்.

இந்த நிலையில் வெட்டுப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிழந்ததால் இராகலை மேற்பிரிவு தோட்டத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் இரு இனங்களுக்கு இடையில் மோதல் சம்பவமாக மாறிவிடக்கூடும் என்ற அச்சத்தில் இத்தோட்டத்தில் கடந்த இரு தினங்களாக பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை இராகலை பொலிசார் மேற்கொண்டு வருவதுடன் உயிரிழந்தவரின் சடலம் சட்டவைத்தியர் ஊடான பிரேத பரிசோதணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராகலை பொலிசார் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதணைக்கு பின் சடலம் உறவினர்களுக்கு கையளிக்கப்படுமெனவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.