சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட 56 இந்திய மீனவர்களில் 52 பேர் நாளைமறுதினம் வியாழக்கிழமை நாடு திரும்புவர்

Prasu
2 years ago
சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட 56 இந்திய மீனவர்களில் 52 பேர் நாளைமறுதினம் வியாழக்கிழமை நாடு திரும்புவர்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட 56 இந்திய மீனவர்களில் 52 பேர் நாளைமறுதினம் வியாழக்கிழமை நாடு திரும்புகின்றனர்.

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் 19ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட 56 மீனவர்களில் 55 பேர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில், ஜனவரி 25 ஆம் திகதி விடுவிக்கப்பட்டனர்.

இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களைத் தாயகம் அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்ட வேளை, இவர்களில் 43 பேருக்குக்  கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது.

இதனால், இயக்கச்சி இடைத்தங்கல் முகாமில் குறித்த மீனவர்கள் பராமரிக்கப்பட்டு மீண்டும் பரிசோதனையின் பின்பு 43 பேரும் மீரியானைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். எஞ்சிய 13 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 4 பேர் கொரோனாத் தொற்றுக்கு இலக்காகியிருந்தனர்.

இதனால் 13 பேரில் 9 பேரும், இயக்கச்சியில் இருந்து வெளியேறிய 43 பேருமாக மொத்தம் 52 பேர் நாளைமறுதினம் இரவு நாடு திரும்பவுள்ளனர்.

இதேவேளை, இந்த ஆண்டு கைதுசெய்யப்பட்ட மேலும் 32 இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.