ஹிட்லர் மற்றும் புட்டின் போன்றவர்களை பின்பற்றி ஜனாதிபதி நாட்டை ஆட்சி  செய்யவேண்டும் - பொதுஜன பெரமுன திஸ்ஸ  கோரிக்கை

Prasu
2 years ago
ஹிட்லர் மற்றும் புட்டின் போன்றவர்களை பின்பற்றி ஜனாதிபதி நாட்டை ஆட்சி  செய்யவேண்டும் - பொதுஜன பெரமுன திஸ்ஸ  கோரிக்கை

சர்வாதிகாரி ஹிட்லர், ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் போன்றவர்களை பின்பற்றி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சி செய்ய வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இந்த விடயம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாம் ஜனாதிபதியை நேரில் சந்தித்து தற்போதைய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினோம். நாம் அவரிடம் தனிப்பட்ட ரீதியில் கோரிக்கை ஒன்றை முன்வைத்தோம்.

ஜனாதிபதி ஆட்சி பொறுப்பினை ஏற்றுக்கொண்டபோது மக்கள் ஹிட்லர் போன்றதொரு புட்டின் போன்றதொரு ஆட்சியாளரையே விரும்பினர்.

வெள்ளைவான், முதலைகள் பற்றி கூறினாலும் மக்களில் பெரும்பான்மையனவர்கள் ஜனாதிபதியின் கடுமையான போக்கினை விரும்பினார்கள்.

எனினும் சர்வதேசத்துடன் கொடுக்கல் வாங்கல் செய்வதற்கும் நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்கவும் நேர்மையான ஆட்சியை ஜனாதிபதி முன்னெடுக்க முயற்சிக்கின்றார்.

ஆனால், அவ்வாறான ஆட்சியை முன்னெடுக்காது கடுமையான ஆட்சியை சில காலங்களுக்கேனும் முன்னெடுக்குமாறு கோரினோம்.

உங்களிடம் ஒளிந்திருக்கும் கடுமையான பாத்திரத்தை வெளிக்கொணர்ந்து அதன் அடிப்படையில் ஆட்சி நடாத்துங்கள் என கோரினோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்