கொழும்பில் இருந்து வந்து வவுனியாவில் கொள்ளை: 7 பேர் கைது

Prathees
2 years ago
கொழும்பில் இருந்து வந்து வவுனியாவில் கொள்ளை: 7 பேர் கைது

வவுனியா, ஈச்சங்குளம் பகுதியில் வீடொன்றிற்குள் புகுந்த கொள்ளைக் கும்பல், வீட்டில் இருந்த சுமார் ஒன்றரை இலட்சம் ரூபா பெறுமதியான தங்கத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளதுடன், அங்கிருந்த இருவரைக் காயப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

தென்னிலங்கையைச் சேர்ந்த குறித்த  கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த ஏழு பேர் இன்று (11) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பிரதேச பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனவரி 5ஆம் திகதி இரவு இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது

குறித்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் பல கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு உரிய கொள்ளைக் கும்பலை வெளிப்படுத்தியுள்ளனர்.

கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் தென்னிலங்கையில் இருந்து வந்துள்ளதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்துஇ பொலிஸ் குழுவொன்று கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதிக்கு சென்று பல நாட்களாக தீவிர சோதனையில் ஈடுபட்டது.

இதன்போது, கிராண்ட்பாஸ் பகுதியில் வசிக்கும் சந்தேகநபர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பின்னர் இவர்களுக்கு உதவிய வவுனியா ஈச்சங்குளம் பகுதியைச் சேர்ந்த இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளையர்கள் மறைத்து வைத்திருந்த 4 தங்க மோதிரங்கள் மட்டும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் மற்ற நகைகளை விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கும்பலில் உள்ள சந்தேக நபர்கள் அனைவரும் 19 முதல் 33 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எனவும் பொலிஸார் தெரிவத்தனர்.