பசியைத் தூண்டி சாப்பிட வைத்து, உணவைச் சமிக்க வைக்கும் இரைப்பை பற்றிய ஆய்வு !

#Health #Benefits #Stomach
பசியைத் தூண்டி சாப்பிட வைத்து, உணவைச் சமிக்க வைக்கும் இரைப்பை பற்றிய ஆய்வு !
  • உணவுச் சத்துகளை ரத்தத்தில் கலக்க வைத்து, உடல் வளர்ச்சிக்கும் ஆற்றலுக்கும் வழி அமைக்கும் முக்கியமான உறுப்பு இது. 
  • நம் ஆரோக்கியத்தின் வழிகாட்டியும் இது தான். நேரத்துக்குப் பசி எடுத்து, தேவையான உணவைச் சரியான அளவில் 
  • ஒருவர் சாப்பிடுகிறார் என்றால், அவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று அர்த்தம்!
  • வயிற்றின் மேற்புறம் சற்றே இடது பக்கமாகச் சாய்ந்து ஒரு பேரிக்காய் வடிவத்தில் இருக்கிறது, இரைப்பை. 
  • இது உணவுக்குழாய் முடியும் இடத்தில் தொடங்குகிறது. முன் சிறுகுடலில் முடிகிறது. இதன் கொள்ளளவு சுமார் இரண்டரை லிட்டர். 
  • இது உணவு இல்லாத போது காற்றிழந்த பலூன் போல சுருங்கி இருக்கும். உணவு உள்ளே வரும் போது தேவைக்கேற்ப விரிந்து கொள்ளும்.
  • இரைப்பைச் சுவரில் மியூக்கஸ் சவ்வு (Mucus layer) இருக்கிறது. இதன் சுரப்பிகள் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தையும் பெப்சின் என்சைமையும் சுரக்கின்றன. 
  • இவையே உணவுச் செரிமானத்துக்கு உதவுகின்றன. 
  • உணவுக்குழாய் மூலம் உணவு இரைப்பைக்குள் வந்ததும் இரைப்பை ஒரு மிக்ஸி மாதிரி வேலை செய்து, உணவை உடைத்துக் குழைத்து கூழ் போல் ஆக்குகிறது. 
  • அப்போது உணவில் உள்ள புரதம் செரிமானமாகிறது. இந்த உணவுக் கூழை சிறிது சிறிதாக முன் சிறுகுடலுக்கு அனுப்புகிறது இரைப்பை.
  • இது சமச்சீரான செரிமானத்துக்கு உதவுகிறது. 
  • கண்ட நேரத்தில் சாப்பிடுவது, அதிகமாக சாப்பிடுவது, அடிக்கடி துரித உணவு சாப்பிடுவது அல்லது 
  • ஒரு வேளை உணவைச் சாப்பிடாமல் புறக்கணிப்பது என்று நாம் சேட்டை செய்தால், இரைப்பைக்குக் கோபம் வந்து எதிர்வினையைக் காட்டும். 
  • அதில் ஒன்று ஏப்பம்! அவசரமாக சாப்பிடும் போதும், தண்ணீர் குடிக்கும் போதும், ஸ்ட்ரா மூலம் மென்பானங்களை உறிஞ்சும் போதும் காற்றையும் சேர்த்தே விழுங்குகிறோம். 
  • இந்தக் காற்று இரைப்பையைத் தாண்டி, சிறுகுடல், பெருங்குடலுக்குச் சென்றால், வயிறு உப்புதல், வாயு பிரிதல் எனப் பல அவஸ்தைகளை ஏற்படுத்தும். 
  • இதைத் தடுக்க இயற்கை ஏற்படுத்தியிருக்கிற வசதிதான் ஏப்பம்! இது ஒரு அனிச்சைச் செயலாக நிகழ்கிறது. 
  • தினசரி அதிக பட்சமாக 20 முறை சிறு ஏப்பம் விடுவது சரி தான். 
  • ஆனால், நெஞ்சு எரிச்சலுடன் அடிக்கடி ஏப்பம் வந்தால், அது இரைப்பையில் பிரச்னை இருக்கிறது எனச் சொல்லும் அலாரம்!
  • ஏப்பத்தில் வித்தியாச வகை ஒன்று இருக்கிறது. நோயாளிகள் அவர்களுக்குத் தெரியாமலே ஏப்பத்தை உருவாக்குவார்கள். 
  • இவர்கள், காற்றை உணவுக் குழாய்க்குள் உறிஞ்சி, ஆவ்வ்வ் என்று சத்தமாக ஏப்பம் விடுவார்கள். இவர்களுக்கு உடலில் நோய் எதுவும் இருக்காது.
  • கவலை, மன அழுத்தம் போன்ற மனக்கோளாறுகளின் புறவெளிப்பாடாக இது இருக்கும். இதற்காக இவர்கள் நாடுவது சோடா!
  • என்னிடம் ஒரு நோயாளி வந்தார். டாக்டர், ஆரம்பத்தில் ஏப்பம் விட்டால் இதமாக இருக்கிறது என்று சோடா குடித்துப் பழகி விட்டேன்.
  • இப்போது இதம் போய் வேதனையாகி விட்டது. ஆனால், சோடாவை விடமுடியவில்லை! என்றார். 
  • சோடா குடித்து ஏப்பத்தை வரவழைப்பது தவறான பழக்கம் என்பதைப் புரிய வைத்து, மனநல மாத்திரைகளைக் கொடுத்து சரி செய்தேன். 
  • இவரைப் போல் இன்னும் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். இரைப்பை காட்டும் அடுத்த எதிர்வினை, எதுக்களித்தல்! 
  • கேஸ்ட்ரோ ஈசோஃபீஜியல் ரிஃப்ளக்ஸ் டிசீஸ் (Gastro esophageal reflux disease-GERD) என்பது மருத்துவப் பெயர். 
  • நெஞ்செரிச்சல் நோய் (Heart burn) என்பது பட்டப் பெயர். உணவுக்குழாயும் இரைப்பையும் இணையும் இடத்தில் ஒரு வால்வு இருக்கிறது. 
  • இது இறுக்கமாக இருந்தால் இரைப்பையில் சுரக்கும் அமிலம் மேலெழும்பி உணவுக்குழாய்க்குள் செல்ல முடியாது.
  • மிகவும் இனிப்பான, காரமான, கொழுப்பு மிகுந்த உணவுகளை அடிக்கடி சாப்பிட்டால், தினமும் மது குடித்தால், 
  • புகை பிடித்தால் இந்த வால்வு வயதாகிப் போன சல்லடை வலை போல் தொங்கிவிடும். 
  • இதனால், காப்பாளன் இல்லாத கோட்டைக்குள் எளிதாக நுழைகிற மாதிரி இரைப்பை அமிலம், பெப்சின், பித்தநீர் இம்மூன்றும் உணவுக்குழாய் வழியாக வாய்க்கு வந்துவிடும். 
  • அப்போது இதிலுள்ள அமிலம் நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். இதுதான் எதுக்களித்தல்!
  • இது நாட்பட்டு நீடிக்கக்கூடாது. உணவு அடிக்கடி எதுக்களிக்கும் போது, உணவுக்குழாய் சுவர் தடிமனாகி விடுகிறது. 
  • இதற்கு  பேரட் உணவுக்குழாய் (Barrets esophagus) என்று பெயர். இது புற்றுநோயாக மாறவும் கூடும். பயப்பட வேண்டாம்! 
  • ஆயிரத்தில் மூன்று பேருக்குத்தான் இப்படி புற்றுநோய் வருகிறது. அதற்குள் இதைச் சரி செய்து விடலாம். 
  • அளவான எடையுடன் இருப்பது, முக்கால் வயிற்றுக்குச் சாப்பிடுவது, உணவு முறையை மாற்றிக் கொள்வது, இடது புறமாகப் படுப்பது, 
  • படுக்கையின் தலைப்பகுதியை உயர்த்திக் கொள்வது போன்றவற்றால் எதுக்களித்தல் பிரச்னைக்கு டாடா காட்டி விடலாம்!
  • இரைப்பைக்குக் கடுங்கோபம் வரும் போது ஏற்படும் முக்கியமான எதிர்வினை, வயிற்றுவலி! 
  • செரிமான மண்டலத்தின் முதன்மையான பிரச்னை இது. உணவு முறை மாறிவிட்ட சூழலில், உலகெங்கிலும் உள்ள பிரச்னையும் இதுவே.
  • 100ல் 30 பேருக்கு இப்பிரச்னை உள்ளது என்றால், இதன் கொடுமையைப் புரிந்து கொள்ளுங்கள்.
  • வயிற்று வலிக்குப் பல காரணங்கள் இருந்தாலும் உடனடியாக நினைவுக்கு வருவது, அல்சர்! அல்சர் எனப்படும் புண் எப்படி வருகிறது?
  • இரைப்பையில் சுரக்கும் அமிலம், நெருப்பு மாதிரி வீரியம் வாய்ந்தது. இதை விரலால் தொட்டால் விரலே வெந்து விடும்! 
  • ஆனால், இதைச் சுரக்கிற இரைப்பையை இதனால் ஒன்றும் செய்ய முடியாது. அந்த அளவுக்கு இரைப்பைச் சுவர் கடுமையான தற்காப்பு உடையது.
  • ஆனால் நீரூற்று போல் சீராகச் சுரக்க வேண்டிய அமிலம் புயல்மழை போல் பொழிந்தால், இரைப்பைச் சுவர் 
  • அதைத் தாக்குப் பிடிக்க முடியாமல் திணறும். அப்படித் திணறும் இடத்தில் புண் உண்டாகும்.
  • இது தான் அல்சர்! இது இரைப்பையில் ஏற்பட்டால் கேஸ்ட்ரிக் அல்சர். முன் சிறுகுடலில் ஏற்பட்டால் டியோடினல் அல்சர். இரண்டிலும் இருந்தால் பெப்டிக் அல்சர்.