இலங்கையில் உருவாகியுள்ள பணவீக்கம் காரணமாக நாளாந்த உணவை குறைத்துக்கொண்டுள்ள பல குடும்பங்கள் - ஐ.நா தகவல்
இலங்கை ரூபாயின் வீழ்ச்சி, எரிபொருள் நெருக்கடி மற்றும் உர நெருக்கடி போன்றவற்றால் உருவாகியுள்ள பணவீக்கம் காரணமாக பல குடும்பங்கள் நாளாந்தம் உண்ணும் உணவை குறைத்துக் கொண்டுள்ளதாக ஐ நா அமைப்பு தெரிவித்துள்ளது.
பொருளாதார ரீதியில் பலவீனமான நிலையில் உள்ள மக்களின் உணவுப்பாதுகாப்பு ,சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து நிலை என்பன எதிர்மறையான தாக்கத்திற்குள்ளாகியுள்ளன எனவும் தெரிவித்துள்ளது.
உள்ளுர் சந்தையில் அடிப்படை உணவுப்பொருட்கள் மக்களிற்கு கிடைப்பதை உறுதி செய்வதற்கான விலைகளை கட்டுப்பபாட்டின் கீழ் வைத்திருப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் குறுகிய காலத்திற்கு பலனளித்தன.
எனினும் ஒக்டோபரில் இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்ததால் இந்த முயற்சிகள் பாதிக்கப்பட்டதுடன் விலைகள் மீண்டும் அதிகரித்தன என ஐ நா அமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையில் அரிசியின் விலை செப்டம்பர், நவம்பர் மாதங்களில் அதிகரித்தது. டிசம்பரில் ஓரளவு நிலையாக காணப்பட்ட பின்னர் மீண்டும் விலைகள் அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. இறக்குமதி செய்யப்படும் அடிப்படை உணவுப்பொருட்களின் விலைகளும் செப்டம்பர் மாதம் முதல் அதிகரித்துள்ளன .
ஜனவரியில் முன்னர் ஒருபோதும் இல்லாத அளவிற்கு விலைகள் முன்னைய வருடங்களை விட 50 வீதம் உயர்ந்தன என ஐ நா அமைப்பு தெரிவித்துள்ளது.