இலங்கையில் சிறுவர்களை தாக்கும் புதிய நோய் -வைத்தியர் தீபால் பெரேரா எச்சரிக்கை!
இலங்கையில் ஒமிக்ரோனின் புதிய மாறுபாட்டால் கோவிட் நோய் மீண்டும் வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டுகளைப் போலவே கடுமையான கோவிட் பரவலை எதிர்கொள்ளும் வகையில் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அவர்களுக்கும் மற்றொரு நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
Multi System Inflammatory Syndrome எனப்படும் இந்த நோயினால் 5 வயது முதல் 15 வயது வரையிலான சிறுவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
எதிர்வரும் வாரங்களில் நாட்டில் கோவிட் தொற்று அதிகரித்தால் இந்த பாதிப்பும் தீவிரமடையும் என லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்த நோய் ஏற்பட்டால் சிறுவர்கள் உயிரிழந்து விடுவதே இதன் பாரதுரமான விடயமாக பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வலிப்பு, கை கால் செயலிழப்பு, நிமோனியா, சிறுநீரக செயலிழப்பு, வயிற்று வலி, கண்கள் மஞ்சள் நிறமாகுதல் போன்ற மாற்றங்கள் ஏற்படும்.
இந்த நோயின் முக்கிய அறிகுறிகளாக, 4 நாட்களுக்கு காய்ச்சல், கடுமையான உடல்வலி, வாந்தி, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, கண் சிவத்தல், தோலழற்சி, உடல் மற்றும் நாக்கு சிவத்தல் போன்றவைகளாகும்.
எனவே, கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களிடம் இந்த அறிகுறிகளைப் பற்றி பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.