பாட்டு சத்தம் அதிகமென கூறிய கிறிஸ்தவ வாலிபர் படுகொலை - பாகிஸ்தானில் தொடரும் கொடூரம்

Prasu
2 years ago
பாட்டு சத்தம் அதிகமென கூறிய கிறிஸ்தவ வாலிபர் படுகொலை - பாகிஸ்தானில் தொடரும் கொடூரம்

பாகிஸ்தான் நாட்டில் முஸ்லிம்கள் தவிர்த்து பிற மதத்தினர் மைனாரிட்டிகளாக உள்ளனர்.  2017ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்துகள் மிக பெரிய மைனாரிட்டி மதத்தினராக உள்ளனர்.

இதனை தொடர்ந்து, கிறிஸ்தவர்கள் 2வது பெரிய மைனாரிட்டி மதத்தினராக உள்ளனர்.  பாகிஸ்தானில் மைனாரிட்டி சமூக மக்கள் மீது தாக்குதல் நடத்துவது தொடர்ந்து வருகிறது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது ஜங்கல் டேரா கிராமம்.  இங்கு வசித்து வந்தவர் முஸ்டாக் அகமது (வயது 41).  இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். குரான் நூலின் பக்கங்களை கிழித்து, தீ வைத்து இவர் எரித்து விட்டதாக கூறி, அந்த பகுதியில் உள்ள மக்கள் கும்பலாக ஒன்று சேர்ந்து அகமதுவை தரதரவென இழுத்து சென்று மரத்தில் கட்டி வைத்து உள்ளனர். பின்னர்  மொத்த பேரும் கல்லாலேயே அவரை தாக்கி உள்ளனர்.

இதில் அகமது அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரை படுகொலை செய்ததோடு, அவரின் உடலையும் மரத்தில் கட்டி தொங்க விட்டுள்ளனர். இந்த சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் இதேபோன்று ஒரு சம்பவம் நடந்தது. இலங்கையை சேர்ந்தவர் பிரியந்தா குமாரா (வயது 40).  அவர் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலம் சியால்கோட் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் மேனேஜராக வேலை பார்த்து வந்தவர். இவர் மதத்தை இழிவுப்படுத்தும் வகையில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரை கிழித்துவிட்டதாக கூறப்பட்டது. அந்த போஸ்டரில் குரானின் வாசகங்களும் அச்சிடப்பட்டிருந்ததாம்.

இதனால், 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து, பிரியந்தா குமாராவை சரமாரியாக தாக்கினர்.  ஆத்திரம் தீராமல் அவரை தரதரவென சாலைக்கு இழுத்து வந்து கட்டையாலேயே தாக்கி உள்ளனர். இதனால் பிரியந்தா குமாரா துடிதுடித்து மயங்கி விழுந்தார்.

கண்ணெதிரே அவர் சுருண்டு விழுவதை பார்த்தும் அந்த கும்பலுக்கு ஆத்திரம் தீரவில்லை. பிரியந்தா குமாராவை நடுரோட்டிற்கு இழுத்து வந்து, தீ வைத்து உயிருடன் எரித்தும் கொன்றது. இந்த் சம்பவம் உலகையே உலுக்கியது.  இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் பாகிஸ்தானின் அவமானகரமான நாள் என்று கூறினார்.

இந்த நிலையில், பஞ்சாப் மாகாணத்தில் லாகூர் நகரில் வால்டன் என்ற பகுதியில், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் கிறிஸ்தவ வாலிபர் ஒருவர் கொல்லப்பட்டு உள்ளார்.

அந்த பகுதியை சேர்ந்த கிறிஸ்தவரான பர்வேஸ் மசீ (வயது 25) என்பவர், தனது அண்டை வீட்டாரான சோனி மாலிக் என்பவரிடம் இசையின் சப்தம் அதிகம் இருக்கிறது.  அதனால், ஒலியை சற்று குறைக்கும்படி கேட்டு கொண்டுள்ளார்.

இதில் ஏற்பட்ட மோதலில், கடந்த ஞாயிற்று கிழமை மாலையில், மாலிக் மற்றும் அவருடன் சேர்ந்த கும்பல், பர்வேசின் உறவினரான சோபல் மசீ என்பவரை தாக்கியுள்ளனர்.  இதில் அவர் காயமடைந்து உள்ளார்.

இந்த நிலையில், மாலிக் மற்றும் சிலர் அடங்கிய கும்பல் பர்வேசை செங்கற்கள் மற்றும் ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.  இந்த தாக்குதலில் சம்பவ பகுதியிலேயே பர்வேஸ் உயிரிழந்து உள்ளார்.  அந்த கும்பல் வானை நோக்கி துப்பாக்கியாலும் சுட்டுள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு முந்தின நாள் ஸ்னூக்கர் விளையாட்டுக்கான கிளப் ஒன்றில் ஏற்பட்ட மோதலில், பர்வேஸ் மற்றும் மாலிக் இருவரும் ஒருவரையொருவர் கடுமையாக திட்டியுள்ளனர்.  உயிரிழந்த பர்வேசுக்கு 7 சகோதரிகள் உள்ளனர்.

இதனை தொடர்ந்து, அந்த பகுதியில் கிறிஸ்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யும்படி வலியுறுத்தினர்.

இந்த சம்பவத்தில் 200 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.  3 பேர் கைது செய்யப்பட்டனர்.  இரு தரப்பினருக்கு இடையே மீண்டும் மோதல்கள் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.