“அரசியல்வாதிகள் தங்கள் மனசாட்சியை ஆய்வு செய்ய வேண்டும்” : - போப் பிரான்சிஸ் கருத்து

Keerthi
2 years ago
“அரசியல்வாதிகள் தங்கள் மனசாட்சியை ஆய்வு செய்ய வேண்டும்” : - போப் பிரான்சிஸ் கருத்து

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் ‘நேட்டோ’ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா, உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 1½ லட்சம் படை வீரர்களை குவித்துள்ளது. 

இதனால் ரஷ்யா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன. ரஷியாவின் தொடர் நடவடிக்கைகளும் தொடர்ந்து போர் பதற்றத்தை அதிகரிக்கும் வகையிலே உள்ளது. 

இந்த நிலையில் ரோம் நகரில் உள்ள வாடிகன் தேவாலயத்தில் இன்று நடந்த பொதுப் பார்வையாளர்கள் கூட்டத்தில் சோகம் நிறைந்த குரலில் பேசிய போப் பிரான்சிஸ், உக்ரைனில் நிலவி வரும் போர் சூழல் தனது இதயத்தில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளதாகவும், சர்வதேச சட்டத்தை இழிவுபடுத்தும் செயலை கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் அரசியல்வாதிகள் தங்கள் செயல்களின் விளைவுகள் பற்றி, கடவுளுக்கு முன்பாக தங்கள் மனசாட்சியை ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறிய அவர், வரும் மார்ச் 2 ஆம் தேதி சாம்பல் புதன் கிழமையை அமைதிக்கான உண்ணாவிரதம் மற்றும் பிரார்த்தனைக்கான சர்வதேச தினமாக கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொண்டார். 

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அமைதிப்படைகளை உக்ரைன் பகுதிகளுக்கு செல்ல உத்தரவிட்ட 2 நாட்களுக்குப் பிறகு போப் பிரான்சிஸ் இன்று கருத்து தெரிவித்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.