ஐநா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு காத்திருக்கும் நெருக்கடி!

#SriLanka
Nila
2 years ago
ஐநா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு காத்திருக்கும் நெருக்கடி!

இலங்கை இராணுவ அதிகாரிகள் 26 பேர் மீது போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதற்கான ஆதாரங்களை ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழு சேகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த 26 அதிகாரிகளுக்கு பயணத்தடை உள்ளிட்ட தடைகளை விதிக்கும் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 49வது அமர்வு நேற்று ஜெனிவாவில் ஆரம்பமானது. இலங்கை விவகாரம் இம்முறை அமர்வில் கவனம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட்டின் சமீபத்திய அறிக்கையிலும் இலங்கைக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இலங்கை தொடர்பான மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை எதிர்வரும் 4ம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது. அன்றைய தினம் இலங்கை தொடர்பான விவாதமும் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், வெளிவிவகார செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, நீதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண ஆகியோர் அமர்வுகளில் பங்கேற்கின்றனர்.

இலங்கை நேரப்படி இன்று காலை 11 மணிக்கு அமர்வில் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உரையாற்ற உள்ளார். இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து வெளிவிவகார அமைச்சர் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுடன் இன்று இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தினார்.

இதனிடையே, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இன்று மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்செலெட்டை சந்திக்க உள்ளார். இதேவேளை, ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் பிரதிபா மஹாநாமஹேவா உரையாற்றினார்.