ஐரோப்பாவின் அமைதியை புதின் சிதைத்துவிட்டார்: நேட்டோ அமைப்பின் தலைவர்
ஐரோப்பாவின் அமைதியை ரஷிய அதிபர் புதின் சிதைத்துவிட்டதாக நேட்டோ அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 6-வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், ரஷிய படைகள் வேகமாக முன்னேறி வருகின்றன. நேற்று ரஷியா - உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை நடைபெறும் உடன்பாடு எட்டப்படாத நிலையில் இன்று ரஷியா ஆக்ரோஷத் தாக்குதலை வெளிப்படுத்தி வருகிறது.
ஏற்கெனவே தலைநகர் கீவ் மற்றும் கார்கிவ் நகருக்குள் நுழைந்து தாக்குதலை நடத்தி வரும் ரஷியப் படை, அதன் தொடர்ச்சியாக இன்று உக்ரைனின் தெற்கு பிராந்தியத்தில் உள்ள கெர்சன் நகருக்குள் நுழைந்துள்ளது.
கார்கிவ் மற்றும் கெர்சன் பகுதிகளில் உள்ள அரசுக் கட்டடங்களை குறிவைத்து ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. போரில் பின்வாங்க மாட்டோம் என்று ரஷிய பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஐரோப்பாவின் அமைதியை ரஷ்ய அதிபர் புதின் சிதைத்துவிட்டதாக நேட்டோ அமைப்பு தெரிவித்துள்ளது.
நேட்டோ அமைப்பின் தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், 'ரஷிய அதிபர் புதின் ஐரோப்பாவின் அமைதியை குலைத்துள்ளார். உக்ரைனின் நியாயமற்ற, மிருகத்தனமான படையெடுப்பை அண்டை நேச நாடுகள் கண்டிக்கின்றன.
ரஷ்ய தாக்குதல் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அது பெலாரஸ் மூலமாக செயல்படுத்தப்பட்டது. நேட்டோ நட்பு நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவை வழங்கும்.
நாங்கள் ரஷ்யாவுடன் மோதலை நாடவில்லை. ஆனால், தங்களைத் தற்காத்துக்கொள்ளத் தயாராக இருக்கிறோம். இதற்காக கிழக்குப் பகுதியை பலப்படுத்தியுள்ளோம்.
எங்கள் கூட்டுப் பாதுகாப்பு விதி என்பது இரும்புக் கவசம் போன்றது. நேட்டோவின் ஒவ்வொரு அங்குலத்தையும் பாதுகாப்போம்
ரஷியா உடனடியாக இந்த போரை நிறுத்த வேண்டும். உக்ரைனுடன் இணைந்து இந்த உலகமே அமைதிக்கு அழைப்பு விடுக்கிறது.
நேட்டோ நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ மற்றும் நிதியுதவியை வழங்கும். ஆனால், ராணுவ வீரர்களை அனுப்பமாட்டோம். ஏனெனில், நேட்டோ இந்த தாக்குதலில் பங்கெடுக்க விரும்பவில்லை' என்று கூறினார்.
மேலும், சுமார் 2 லட்சம் உக்ரேனியர்களுக்கு அடைக்கலம் கொடுத்த போலாந்துக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.