டயர் வெடித்ததால் ஏற்பட்ட விபரீதம்..! ஒருவர் உயிரிழப்பு: யாழில் சம்பவம்

Mayoorikka
2 years ago
டயர் வெடித்ததால் ஏற்பட்ட  விபரீதம்..! ஒருவர் உயிரிழப்பு: யாழில் சம்பவம்

திருநெல்வேலி பகுதியில் இடம்பெற்ற பட்டா - மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்தில் கொக்குவில் கிழக்கை சேர்ந்த விமலச்சந்திரன் நிதுசன் (வயது 28) என்பவரே உயிரிழந்துள்ளார்.

புத்தூரை சேர்ந்த வி.தனுஜன் (வயது 25), யாழ்ப்பாணத்தை சேர்ந்த உலகநாதன் கிரிசங்கர் (வயது 24) கொக்குவில் கிழக்கை சேர்ந்த க. சியாந்தன் (வயது 26) ஆகியோரே படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

யாழ்ப்பாணம் - பலாலி வீதியில் பரமேஸ்வரா சந்திக்கு அருகில் இன்று (02) அதிகாலை 12.15 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பலாலி வீதியில் , திருநெல்வேலி பகுதியில் இருந்து யாழ். நகர் பகுதியை நோக்கி பயணித்த பட்டா ரக வாகனத்தின் டயர் வெடித்ததில் , வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி, சுமார் 20 மீற்றர் தூரம் மோட்டார் சைக்கிளையும் இழுத்து சென்று, வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான் ஒன்றுடன் மோதி நின்றுள்ளது.

அதில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் வீதியில் தூக்கி வீசப்பட்டனர், அத்துடன், பட்டா வாகனத்தினுள் இருந்தவர்களும் காயங்களுக்கு உள்ளானார்கள்.

குறித்த விபத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது , ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏனைய மூவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று வாகனங்களையும் கோப்பாய் பொலிஸார் பொலிஸ் நிலையம் எடுத்து சென்றுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.