'ஆபரேஷன் கங்கா' - இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறு உத்தரவு
7-வது நாள் இன்றும் ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் நடைபெற்று வருகிறது. உக்ரைன் கார்கிவ் நகரில் ரஷியா ஆயுதம் ஏந்திய வாகனங்கள் மற்றும் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்தநிலையில், பாதுகாப்பு நலன் கருதி உக்ரைனின் கார்கிவிலிருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேற இந்திய தூதரகம் உத்தரவிட்டுள்ளது. கார்கிவ்வில் உள்ள இந்தியர்கள் பெசோஷின், பபாயி உள்ளிட்ட பகுதிகளை நோக்கி செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.
உக்ரைன் நாட்டு நேரப்படி இன்று மாலை 6 மணிக்குள் கார்கிவ்வை விட்டு உடனடியாக வெளியேற இந்தியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மோதல் நடைபெறும் கார்கிவ் பிற நகரங்களிலுள்ள இந்தியர்களை மீட்க வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்பதற்காக மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 'ஆபரேஷன் கங்கா' என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் அழைத்து வரப்படுகின்றனர்.