ஜெனிவா அலுவலக உயர் அதிகாரிகளுடன் 5 தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் சந்திப்பு! - இணையவழியில் ஒரு மணி நேரம் பேச்சு

Keerthi
2 years ago
ஜெனிவா அலுவலக உயர் அதிகாரிகளுடன் 5 தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் சந்திப்பு! - இணையவழியில் ஒரு மணி நேரம் பேச்சு

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் ஜெனிவா அலுவலக உயர் அதிகாரிகளுடனான முக்கிய இணையவழி சந்திப்பு ஒன்று ஐந்து தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுடன் நேற்று (01) இலங்கை நேரம் இரவு 7 மணிக்கு நடைபெற்றது.

இந்தத் தகவலை ரெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

"ஐந்து தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு 25 பெப்ரவரி 2022 திகதியிடப்பட்டு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தின் பின்னர் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலக உயர் அதிகாரிகள் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுடனான சந்திப்பை மேற்கொண்டிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது எனக் கருதப்படுகின்றது.  

இலங்கை மீதான 46/1 பிரேரணை கொண்டுவரப்பட்டு அதன் மீதான ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் எழுத்துமூல அறிக்கை மார்ச் 3ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட இருக்கும் வேளையிலே நடந்த இந்தச் சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.  

இலங்கை சார்பில் வெளிநாட்டமைச்சர் ஜி.எல். பீரிஸ் தலைமையில் ஒரு குழுவினர் ஐ.நாவுக்கு நேரடியாகப் பயணம் செய்திருந்த வேளையில் இலங்கைத் தமிழ் மக்கள் சார்பில் ஐ.நா. உயர் அதிகாரிகளுடன் நடைபெற்ற முக்கிய சந்திப்பு இதுவே ஆகும்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தால் (ரெலோ) ஒருங்கிணைக்கப்பட்ட இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.வி.விக்னேஸ்வரன் (தலைவர் - தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி), செல்வம் அடைக்கலநாதன் (தலைவர் - ரெலோ), தர்மலிங்கம் சித்தார்த்தன் (தலைவர் - புளொட்) மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், ரெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி ஆகியோர் கலந்துகொண்டனர். உடல்நிலை காரணமாக தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ந.ஸ்ரீகாந்த இறுதி நேரத்தில் கலந்துகொள்ள முடியவில்லை.

ஆக்கபூர்வமான இந்தச் சந்திப்பு கலந்துரையாடல் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் வரை நீடித்தது. இதில் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறலுக்கான நீதிப் பொறிமுறை, தண்டனையின்மை நீடிப்பு, காணி அபகரிப்பு, குடிப்பரம்பல் சிதைப்பு, திட்டமிட்ட குடியேற்றங்கள், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், அரசியல் கைதிகள் மற்றும் அரசுக்குத் தேவையானவர்களுடைய விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர், அக்குடும்பங்களுக்கான நீதி, காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகச் செயற்பாடுகள் மற்றும் புதிய ஏற்பாட்டில் சாட்சியங்கள், ஆதாரங்களைத் திரட்டுதல் என்பன பற்றி தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளால் ஐ.நா. உயர் அதிகாரிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

அரசு தனது தரப்பில் பலரை ஐ.நா. அமர்வுக்கு அனுப்பி வைத்திருக்கும் இவ்வேளையில் தமிழர் தரப்புப் பிரதிகளை ஐ.நா. அலுவலர்கள் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் வெற்றிகரமாக நடைபெற்றது தமிழர் தரப்பின் மிகவும் முக்கியமான நகர்வாகக் கருதப்படுகின்றது.

மேலும், கடந்த செப்டெம்பர் மாதம் 2020 ஆம் ஆண்டு ஐந்து தமிழ்த் தேசியக் கட்சிகளால் கையொப்பம் இடப்பட்டு அனுப்பப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்ட பல விடயங்கள் இம்முறை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் உள்வாங்கப்பட்டு இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டது" - என்றா