பெலாரஸில் உள்ள இலங்கை மாணவர்களுக்கு வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்!

Nila
2 years ago
பெலாரஸில் உள்ள இலங்கை மாணவர்களுக்கு  வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்!

தற்காலிகமாக இலங்கைக்கு நாடு திரும்ப விரும்பும், பெலாரஸில் உள்ள அனைத்து இலங்கை மாணவர்களும், மொஸ்கோவுக்கு பயணிக்குமாறு வெளிவிவகார அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.

யுக்ரைனில் நிலவுகின்ற சமீபத்திய நிலைமையின் காரணமாக, பெலாரஸுக்கு ஒரே நேரத்தில் அங்கீகாரமளிக்கப்பட்டுள்ள மொஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதரகத்துடன் ஒருங்கிணைந்து வெளிவிவகார அமைச்சு, பெலாரஸின் நிலைமையை தொடர்ந்தும் கண்காணித்து வருகின்றது.

சுமார் 1,561 இலங்கை மாணவர்கள் தமது உயர் கல்வியில் ஈடுபடுகின்ற, பெலாரஸில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுடனும் தூதரகம் நெருங்கிய தொடர்பைப் பேணி வருகின்றது.

சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தினர், மாணவர் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் பெற்றோருடன் தூதரகம் சந்திப்புக்களை நடத்தியுள்ளது.

அவற்றில் ஒப்புக் கொள்ளப்பட்டதன்படி, தற்காலிகமாக நாடுதிரும்ப விரும்பும் மாணவர்கள், மொஸ்கோ வழியாக இலங்கைக்கு பயணிப்பதை எளிதாக்கும் பணியில் தூதரகம் தற்போது ஈடுபட்டுள்ளது.

இது சம்பந்தமாக, மொஸ்கோவில் உள்ள தூதரகம், பெலாரஸில் உள்ள ரஷ்யக் கூட்டமைப்பின் தூதரகத்துடன் தொடர்பு கொண்டு, அத்தகைய மாணவர்களுக்கு மொஸ்கோ வழியாக பயணம் செய்வதற்கு அவசர அடிப்படையில் விஸாவை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, தற்காலிகமாக நாடுதிரும்ப விரும்பும் பெலாரஸில் உள்ள அனைத்து இலங்கை மாணவர்களும் மொஸ்கோவிற்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்களை, மொஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் 24 மணிநேரமும் இயங்கக்கூடிய 0079 801 445 726 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.

அல்லது slemb.moscow@mfa.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொண்டும் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.