வெற்றி, வலிமை தரும் செவ்வாய் பகவான் பற்றிய சில தகவல்கள்!!

#spiritual #God #today
வெற்றி, வலிமை தரும் செவ்வாய் பகவான் பற்றிய சில தகவல்கள்!!

செவ்வாய் கிரகத்தை பலரும் கடவுளாக வணங்குகின்றனர். அவ்வாறு வணங்கினால் தைரியமும், அரச சபையில் பேசும் ஆற்றலும், தோள் வலிமையும், போரில் வெற்றியும் கிடைக்கும்.

செவ்வாய் தாது கிரகம். பூமி நிலை கிரகம், வெப்பம் பொருந்தியது. பஞ்ச பூதங்களில் செவ்வாய் நெருப்பு கிரகமாகும். செவ்வாய் சிவப்பு நிறம். ஏழு கிரகணங்களைக் கொண்டது.

தீயுள்ள இடங்கள், தீயினால் இயக்கப்படும் எந்திரங்கள். மற்றுமுள்ள சாதனங்கள், கொல்லன் பட்டறை, எந்திரக் கருவிகள், ஆயுதக் கிடங்குகள், சூளை, கொலை நடக்குமிடம், போர் மைதானம், போர்ப் பயிற்சிப் பள்ளிகள், பொறியியல் கூடங்கள், அறுவை சிகிச்சை செய்யும் இடங்கள் செவ்வாய் கிரகத்தின் வாசஸ்தலமாகும்.

மனித உடலில் முகம், ரத்தம், சுரப்பிகள், விரை, கல்லீரல் இடது காது, எலும்புகளுக்குள்ளிருக்கும் சத்துப் பொருள் இவற்றில் ஆதிக்கம் செலுத்துபவன் செவ்வாயே.

செவ்வாய்க்கிரகம் ஒரு ராசியில் சுமார் 45 நாட்கள் தங்குகிறார். ஒருமுறை ராசி சக்கரத்தைச் சுற்றிவர 18 மாதங்களாகின்றன.

இவருக்கு சக்திதரன், குமாரன், மகாகாயன், மங்கலன், தனப்பிரதன், லோகிதாங்கன், ரத்தாயதேஷணன், ரத்தர்ணன், ஹோமகுண்டலி, ரோகநாசனை, ரக்தவஸ்ரன் என்ற பிற பெயர்களும் உண்டு.

வைத்தீஸ்வரன்கோயில் சென்று செவ்வாயை வழிபட செவ்வாயின் தீய தசாபுத்தி நடப்பவர்கள் அது நீங்கி சுகம் பெறலாம். மயிலாடுதுறையில் இருந்து 15 கி.மீ. தொலைவில் வைத்தீஸ்வரன் கோவில் உள்ளது.

செவ்வாய் தோசம் வந்தால் சகோதர, சகோதரிகளின் வெறுப்புக்கு ஆளாகுதல், வேலைக்காரர்களால் அவமானப் படுதல், பூர்வீக பூமியை விற்று, குடி, சூது, பெண் என்று அலைதல் போன்றவை களுக்கும் காரணமாகி விடும். குடியிருக்க வசதியான வீடு கூட, செவ்வாய் தோசம் வந்தால் அமையாது. செவ்வாய் தோஷம் பரம்பரையாக வரும் தன்மை கொண்டது.

செவ்வாய் தோஷமுள்ள பெண் ஆண்மைக்குணம் அதிகம் உடையவள். செவ்வாய் தோஷம் உள்ள ஆண், பெண் தன்மை உடையவராவார்.

செவ்வாய் தோஷம் 7-ம் இடத்திலிருந்தும், 8-ம் இடத்திலிருந்தும் செயல்பட்டால் திருமணம் ஆனவுடன் செயல்பட ஆரம்பிக்கும். 12-ம் இடம், 2-ம் இடம் என்றால் பிறந்தது முதலே இருக்கும். 4-ம் இடம் செவ்வாய் வீடு வாய்க்கும்போதோ, கல்வி கற்கும்போதோ, பயணம் செய்யும் போதோ, உத்யோகம் பெற்ற பின்பு மட்டும் செயல்படும்.

செவ்வாய் தோஷத்தை நீக்குவதற்கு செவ்வாய்க் கிழமைகளில் வள்ளலாரின் ‘தெய்வமணிமாலை’, குமர குருபர சுவாமிகள் எழுதிய திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா, அருணகிரி நாதரின் திருப்புகழ், குறிப்பாக கந்தரலங்காரம், பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம், கவிதேவராயன் எழுதிய கந்தர்சஷ்டி கவசம் போன்றவைகளை பாராயணம் செய்யலாம்.

விஷ்ணு சகஸ்ரநாமம் ஞாயிறு நண்பகல் பாராயணம் செய்து சர்க்கரை பொங்கல் விநியோகம் செய்தால் செவ்வாய் தோஷம் விலகும். துர்க்கையை வழிபட்டு வந்தாலும் செவ்வாயின் அருள் பெறலாம். நவக்கிரகங்களின் சன்னதியில் செவ்வாய் ‘காயத்ரி’ மந்திரத்தை 36 முறை உச்சரித்து 9 முறை வலம் வருதலும் செவ்வாய் தோஷத்தின் கடுமையைக் குறைக்கும்.

ஆலயங்களில் நெய்தீபம் ஏற்ற உதவி செய்தலும் ஆலயத் திருப்பணிக்கான கட்டிட புனருத்தாரணப் பணிகளுக்கு பொருள்உதவி செய்வதும் கூட செவ்வாய் தோஷம் நிவர்த்திக்கான பரிகாரங்களாகும்