இலங்கை மக்கள் பட்டினியால் உயிரிழக்கும் அபாயம்!
இலங்கையில் ராஜபக்ஷர்களின் பொறுப்பற்ற ஆட்சி காரணமாக பொதுமக்கள் பட்டினியால் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரம் நாளுக்கு நாள் அதால பதாளத்தை நோக்கி நகர்த்து வரும் நிலையில் பணவீக்கம் 20 வீதமாக அதிகரிக்கும் என பொருளியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
பொருளாதார நிலைமை தொடர்பில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வர்த்தக பீடத்தின் வணிகப் பொருளியல் துறைத் தலைவர் பேராசிரியர் ஜனக் குமாரசிங்க முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைவடைந்து செல்கின்றமை மக்களின் வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும் என என அவர் எச்சரித்துள்ளார்.
நாட்டின் பணவீக்கம் தற்போது 16.8 வீதமாக உள்ள நிலையில், அது 20 சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக எரிவாயு, எரிபொருள் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படும் என பேராசிரியர் ஜனக் குமாரசிங்க குறிப்பிட்டார்.
சமகால அரசாங்கத்தின் ஆட்சியில் நாட்டு மக்கள் பெரும் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளனர். இந்நிலையில் மேலும் விலை அதிகரிப்புகள் ஏற்படுமாயின் பட்டினி மரணங்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே எரிபொருள் இன்மையால் பல உணவகங்கள், பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.