எரிவாயு தட்டுப்பாடு 4 நாட்களில் முடிவுக்கு வரும் - லிட்ரோ

Mayoorikka
2 years ago
எரிவாயு தட்டுப்பாடு 4 நாட்களில் முடிவுக்கு வரும் - லிட்ரோ

இன்னும் நான்கு நாட்களில் எரிவாயு தட்டுப்பாடு முடிவுக்கு வரும் என லிட்ரோ தெரிவித்துள்ளது. தற்போது தினசரி சந்தைக்கு வெளியிடப்படும் எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கை 120,000 ஆகும். மேல் மாகாணம் மற்றும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் தற்போது நிலவும் எரிவாயுக்கான வரிசைகள் நாளை காலையுடன் நிறைவடையும் என லிட்ரோவின் சிரேஷ்ட பேச்சாளர்  தெரிவித்தார்.

மருத்துவமனைகள், மீன்பிடி மற்றும் ஹோட்டல்கள் உள்ளிட்ட அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு எரிவாயு வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

தெமட்டகொட மற்றும் மருதானை பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான வீட்டு எரிவாயு சிலிண்டர் விநியோகம் நேற்று இரவு இடம்பெற்றது. மருதானை மற்றும் தெமட்டகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளின் கோரிக்கைக்கு அமையவே இது இடம்பெற்றுள்ளது.

காஸ் சிலிண்டர்கள் போலீஸ் பாதுகாப்பில் விநியோகிக்கப்பட்டதுடன் கிட்டத்தட்ட ஆயிரம் வீட்டு எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டன. கொழும்பு 07, மல்பாரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் எரிவாயு சிலிண்டர்கள் இன்று வழங்கப்படவுள்ளதாக லிட்ரோ தெரிவித்துள்ளது.

கொழும்பு 01 முதல் 15 வரையில் உள்ள அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் எரிவாயு விநியோகம் விரைவில் நிறைவடையும் என லிட்ரோவின் சிரேஷ்ட பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

லிட்ரோ நிறுவனத்தில் தற்போது 10 நாட்களுக்கு எரிவாயு இருப்பு உள்ளது. 03 எரிவாயு கப்பல்களுக்கு தேவையான 10 மில்லியன் அமெரிக்க டொலர்களும் கடந்த திங்கட்கிழமை பிற்பகல் வழங்கப்பட்டது.