வவுனியாவில் வீட்டுக்குள் வாள்களுடன் சென்ற இளைஞர் குழு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

#SriLanka #Vavuniya #Home
வவுனியாவில் வீட்டுக்குள் வாள்களுடன் சென்ற இளைஞர் குழு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றிற்குள் வாள்களுடன் சென்ற இளைஞர் குழு ஒன்று தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக நெளுக்குளம் பொலிசார் தெரிவித்தனர்.
இன்று (25) பகல் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, வேப்பங்குளம், 7 ஆம் ஒழுங்கையில் உள்ள வீடு ஒன்றில் கணவன் வேலைக்கும், பிள்ளைகள் பாடசாலைக்கும் சென்ற நிலையில் பெண் மட்டும் வீட்டில் சமைத்துக் கொண்டு நின்றுள்ளார்.

இதன்போது கார் ஒன்றில் வாள்களுடன் சென்ற இளைஞர் குழுவொன்று குறித்த வீட்டின் யன்னல், கதவு, கதிரைகள் மீது தாக்குதல் நடத்தியதுடன், பெண்ணையும் தாக்க முயற்சித்துள்ளனர். இதனையடுத்து அங்கிருந்து தப்பியோடிய பெண் அருகில் இருந்த கடைக்குள் நுழைந்துள்ளார். பின்தொடர்ந்து சென்ற இளைஞர் குழு, கணவன் எங்கே எனக் கேட்டு அச்சுறுத்தல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா, நெளுக்குளம் பொலிசார் தாக்குதல் நடைபெற்ற இடத்தை பார்வையிட்டதுடன் தாக்குதல் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.