இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் உறுப்பினர் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டாரா?

#SriLanka
Nila
2 years ago
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் உறுப்பினர்   பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டாரா?

பொருளாதார நெருக்கடி தொடர்பில் மக்களின் கோபம் அதிகரித்துள்ள நிலையில், இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் (MB) உறுப்பினர் சமந்த குமாரசிங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எவ்வாறாயினும், பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டாரா? இல்லையா? என்பது தெளிவாகத் தெரியவில்லை.

சமந்த குமாரசிங்க நாட்டின் மிகப் பெரிய மூலிகை அழகுசாதனப் பொருட்கள் நிறுவனங்களில் ஒன்றின் உரிமையாளராக உள்ளார். 2019 இன் பிற்பகுதியில் ஜனாதிபதி ராஜபக்ச ஆட்சிக்கு வந்த பிறகு அவர் நாணயச் சபையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

அண்மைக்காலமாக நாணயச் சபையின் கூட்டங்களில் போது அவர் ஓரங்கட்டப்பட்டதாகவும், ரூபாயை மிதக்க விடும் நாணயச் சபையின் முடிவை அவர் பெரிதும் எதிர்த்தாகவும் அறியப்படுகின்றது.

இவ்வாறான பின்னணியிலேயே அவர் தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும் .