பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட 42 பேரை மன்றில் முன்நிலையாகுமாறு அறிவிப்பு!
சிறிலங்காவின் பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட 42 பேரை ஏப்ரல் 08 ஆம் திகதி மன்றில் முன்நிலையாவதற்கு அறிவிப்பு விடுக்குமாறு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரவைக்கு உத்தரவிடுமாறு கோரி இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தாக்கல் செய்த இரண்டு மனுக்கள் குறித்த பரிசீலனையின் போது இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மனுவில் எரிபொருள், எரிவாயு, உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர், அமைச்சரவை மற்றும் பிற சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர்கள் கோரியுள்ளனர்.
அமைச்சரவை அமைச்சர்கள், பிரதமர் மஹிந்த ராஜபக்ச, அமைச்சரவையின் செயலாளர், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர், நிதியமைச்சு உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள், சட்டமா அதிபர் உள்ளிட்ட 42 பேர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.