மக்களின் உணர்வுகளுக்கு ஜனாதிபதி மதிப்பளிப்பதாக தெரியவில்லை: செந்தில் தொண்டமான்

Mayoorikka
2 years ago
மக்களின் உணர்வுகளுக்கு ஜனாதிபதி மதிப்பளிப்பதாக தெரியவில்லை: செந்தில் தொண்டமான்

மக்களின் உணர்வுகளுக்கு ஜனாதிபதி மதிப்பளிப்பதாக தெரியவில்லை. நாட்டில் ஏற்றுபட்டுள்ள அத்தனைப் பிரச்சினைகளுக்கும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியே பொறுப்புக்கூற வேண்டியவராக உள்ளாரென இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

 
 10 நாட்களாக காலி முகத்திடலிலும், நாட்டின் ஏனைய பகுதிகளிலும் ஒரு பொதுவான நோக்கத்திற்காகவே தொடர்ந்து  அனைவரும் போராடிவருகின்றனர். 
 
நாட்டில் எரிபொருள் மற்றும் எரிவாயுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவிவருகிறது. அதேபோன்று அத்தியாவசியப் பொருட்களுக்கும் பாரிய தட்டுபாடு ஏற்பட்டுள்ளதுடன், மின்சார துண்டிப்பபு இடம்பெற்று வருகிறது. எங்கு பார்த்தாலும் மக்கள் வரிசையில் நிற்கும் காட்சிகளையே காணமுடிகிறது.எந்த பொருட்களையும் கொள்வனவு செய்ய முடியாத அளவிற்கு விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
 
இவ்வாறு நாட்டு மக்களுக்கு சுமைக்கு மேல் சுமை அதிகரித்துள்ளது. வரலாறு காணாத ஒரு பொருளாதார நெருக்கடியை அரசாங்கத்தின் செயற்பாட்டால் மக்கள் எதிர்கொண்டுள்ளனர். இவை அனைத்துக்கும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியே பொறுப்புக்கூற வேண்டியவராக உள்ளார்.
 
மக்களின் பிரச்சினைகள் ஒருபுறம் இருக்கின்ற சூழலில், அமைச்சரவை மாற்றுகிறோம், அரச அதிகாரிகளை மாற்றுகிறோம் எனக் கூறி அரசாங்கம் மக்களின் போராட்டத்திற்கு தீர்வுக்காணாமையானது,அரசாங்கத்தின் முதிர்ச்சியற்ற தன்மையையே வெளிகாட்டுகிறது.
 
 மக்களின் கோரிக்கை ஒன்றாகவும் அதற்கு அரசாங்கம் வழங்கும் பதில் வேறொன்றாகவும் உள்ளது.இது தலைவலிக்கு மருந்து வாங்க சென்றால் மூட்டு வலிக்கு மருந்து கொடுப்பது போன்ற ஒரு செயற்பாடாகும். ஜானாதிபதி செயலகத்திற்கே ஜனாதிபதியால் செல்ல முடியாத சூழல் இருக்கும் தருணத்தில் மக்களின் பிரச்சினைகளுக்கு எவ்வாறு  ஜனாதிபதி தீர்வுகளை பெற்றுக்கொடுக்க போகின்றார் என்பது கேள்விக்குறியானதொரு விடயமாக மாறியுள்ளது. எனவே மக்களின் போராட்டங்களுக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும் என செந்தில் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.