அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிப்பு?

Prabha Praneetha
2 years ago
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிப்பு?

நாடாளுமன்றம் இன்று காலை 10.00 மணிக்கு கூடவுள்ளது.

இன்று முதல் எதிர்வரும் 22ஆம் திகதி வரை நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இன்று காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை வாய்மொழி விடைகளுக்கான கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், சபை ஒத்திவைப்பு நேரத்தில் கேள்விகள் மற்றும் பிரேரணைக்கு மாலை 4.30 மணி முதல் 4.50 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன்படி மாலை 4.50 மணி முதல் 5.30 மணி வரை அரசு மற்றும் எதிர்கட்சி தரப்பில் விவாதம் நடைபெறவுள்ளது.

இதேவேளை, அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் இன்று கையளிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டிருந்த அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், இந்தப் பிரேரணை இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்படும் என தெரிவித்தார்.

தவறினால் புதன்கிழமை பிரேரணையை கையளிக்கவுள்ளதாக தெரிவித்த அவர், நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.