இலங்கை தொடர்பில் அமெரிக்கா ஊழல் குற்றச்சாட்டு! மிக மோசமான அறிக்கையும் வெளியீடு

Mayoorikka
2 years ago
இலங்கை தொடர்பில் அமெரிக்கா ஊழல் குற்றச்சாட்டு! மிக மோசமான அறிக்கையும்  வெளியீடு

இலங்கையின் உயர்மட்டத்தில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பாதுகாப்புப் படையினர், பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு எதிரான பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் இராணுவ அதிகாரிகளை விடுதலை செய்தல், உயர் பதவிகளுக்கு பதவி உயர்வு வழங்குதல் உள்ளிட்ட பல சம்பவங்களுக்கு இலங்கை மீது அமெரிக்க அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இலங்கைக்கு எதிராக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள மிக மோசமான அறிக்கை இதுவாகும் எனவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. 30 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் பாதாள உலகக் கும்பல் எனப்படும் 8 பேரை பொலிஸார் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கொஸ்கொட தாரக உறுஜுவ போன்றவர்களின் பெயர்களும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்ட பாதுகாப்புப் படையினரை விடுவித்தது தவறு என்றும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.