தலைவலிக்கு தலையணை மாற்றுவது போல் புதிய அமைச்சரவையை ஜனாதிபதி நியமித்துள்ளார்!

Mayoorikka
2 years ago
தலைவலிக்கு தலையணை மாற்றுவது போல் புதிய அமைச்சரவையை ஜனாதிபதி நியமித்துள்ளார்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தவறான முடிவுகள் காரணமாகவே 22 மில்லியன் மக்கள் துன்பங்களை அனுபவித்து வருவதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

சிங்கள பத்திரிகை ஒன்று பேட்டியளித்துள்ள சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தலைவலிக்கு தலையணை மாற்றுவது போல் புதிய அமைச்சரவையை நியமித்துள்ளதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது எனக் கூறியுள்ளார்.

அனைத்து கட்சிகளும் இணைந்து இடைக்கால நிர்வாகத்தை உருவாக்கி இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும். இரண்டு வருடங்களுக்கு முன்னர் சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்றிருக்க வேண்டும் என்று தற்போது ஜனாதிபதி தவறை ஏற்றுக்கொண்டுள்ளார்.

கமத்தொழிலாளர்களுக்கு இரசாயன பசளையை வழங்காது தொடர்பான தவறையும் தற்போதே அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். அப்படியானால், நாட்டின் 22 மில்லியன் மக்கள், ஜனாதிபதி உட்பட ஆளும் தரப்பினரின் தவறு காரணமாக துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

தவறு நடந்துள்ளது என்று கூறினால், ராஜினாமா செய்ய வேண்டும். சர்வதேச நாணயத்திற்கு செல்லவிடாது தடுத்தவர் அஜித் நிவாட் கப்ரால். அவரது எண்ணம் போல் இலங்கை மத்திய வங்கியை நிர்வாகம் செய்தார்.

கமத்தொழிலாளர்களின் பிரச்சினையிலும் இதே நிலைமை. சேதனப் பசளை திட்டத்தை 5 ஆண்டு நீண்ட திட்டத்தின் கீழ் செயற்படுத்த வேண்டும் என யோசனை முன்வைத்த கமத்தொழில் ஆலோசகர்கள், செயலாளர்களை பதவியில் இருந்து ஜனாதிபதி நீக்கினார். எவருடையே ஆலோசனைகளையும் பொருட்படுத்தவில்லை.

நிதியமைச்சின் சில அதிகாரிகள் தவறான தகவல்களை வழங்கினர். உண்மையான தகவல்களை வழங்கவில்லை. விவசாயிகளுக்கு சரியான நேரத்தில் இரசாயன பசளையை வழங்கியிருந்தால், அவர்கள் வீதியில் விழுந்திருக்க மாட்டார்கள்.

கமத்தொழிலாளர்களே நாட்டை தன்னிறைவு அடைய செய்தனர்.அதனை ஜனாதிபதி மறந்து போனார். சரியான நேரத்தில் இரசாயன பசளைகள் கிடைத்து பயிர் செய்ய முடிந்திருக்குமாயின் மக்களுக்கு பட்டினி ஏற்பட்டிருக்காது.

விவசாயிகளின் உதவியால் ஏனைய மக்களுக்கு குறைந்த விலையில் அரிசி கிடைத்திருக்கும். எனினும் நாட்டு மக்களுக்கு அந்த சந்தர்ப்பம் இல்லாமல் போயுள்ளது என சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.