1 இலட்சம் அமெரிக்க டொலர்கள் முதலிடும் வெளிநாட்டவர்களுக்கு 10 வருட வீசா! கோட்டாபய அதிரடி

Mayoorikka
2 years ago
1 இலட்சம் அமெரிக்க டொலர்கள் முதலிடும் வெளிநாட்டவர்களுக்கு 10 வருட வீசா! கோட்டாபய அதிரடி

நீண்டகால வதிவிட வீசா வழங்குதல் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஷ சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

இதற்கு முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த நீண்டகால வதிவிட வீசா வழங்கும் பொறிமுறைக்குப் பதிலாக புதிய முறைமையொன்றுக்கு 2021 மார்ச் மாதம் 07 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கிகாரம் வழங்கப்பட்ட நிலையில், குறித்த பொறிமுறையின் கீழேயே ஜனாதிபதியின் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

கூட்டு சொத்துக்களின் பெறுமதி குறைந்தபட்சம் 75,000 அமெரிக்க டொலர்கள் அல்லது அதற்கு மேலதிகமாக முதலீடு செய்கின்ற வெளிநாட்டவர்களுக்கு மற்றும் வெளிநாட்டுக் கம்பனிகளின் பணிப்பாளர்களுக்கும் அவர்களுடைய துணைகள் மற்றும் தங்கி வாழ்பவர்களுக்கும் அவ்வாறு முதலிடுகின்ற அமெரிக்க டொலரின் அளவுக்கமைய 5 ஆண்டுகள் தொடக்கம் 10 ஆண்டுகள் வரையான நீண்டகால வதிவிட வீசா வழங்க யோசனை முன்வைக்கப்பட்டது.

இலங்கை மத்திய வங்கியால் அங்கிகாரமளிக்கப்பட்ட வணிக வங்கியொன்றில் குறைந்தது 100,000 அமெரிக்க டொலர்களை வைப்பிலிடும் வெளிநாட்டவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கான வதிவிட வீசா வழங்குவதற்கு இயலுமை கிட்டும் வகையில் 'தங்க சுவர்க்க வீசா நிகழ்ச்சித்திட்டம்' எனும் பெயரிலான நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தல் ஆகிய யோசனைகளுக்கே அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.