பிரதமராக பதவியேற்கவுள்ள ரணிலுக்கு போராட்டகாரர்களால் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Nila
2 years ago
பிரதமராக பதவியேற்கவுள்ள ரணிலுக்கு போராட்டகாரர்களால் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அதற்கமைய, இன்று மாலை புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விடயம் தொடர்பில் தற்போது இறுதிக்கட்ட கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுன ரணில் விக்ரமசிங்கவுக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது, இதனால் அவர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

அதேவேளை ராஜபக்சக்களைக் காப்பாற்றும் நோக்கில் ரணில் பதவியேற்பு நடைபெற்றால், ரணிலை வீட்டுக்கு அனுப்பும் போராட்டத்தை தொடரவேண்டும் என்று ‘கோட்டா கோ கமவில்’ தங்கியிருக்கும் போராட்டக்காரர்கள் தெரிவித்து வருகின்றார்கள்.

நாட்டைவிட பதவியே முக்கியம் என்று மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் ரணில் நடந்துகொண்டால், ரணிலுக்கு எதிராக ‘Ranil Go Home’ போராட்டத்தை முன்னெடுக்கவேண்டி ஏற்படும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.