பேராதனையில் எரிபொருள் விநியோக பௌசரில் காணப்பட்ட தண்ணீர்: தயக்கம் காட்டிய மக்கள்

#SriLanka #Lanka4
Shana
2 years ago
பேராதனையில் எரிபொருள் விநியோக பௌசரில் காணப்பட்ட தண்ணீர்: தயக்கம் காட்டிய மக்கள்

பேராதனை - கெலிஓயா எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வருகை தந்த டீசல் எரிபொருள் விநியோக பௌசரில் தண்ணீர் இருந்தமையினால் அமைதியின்மை நிலவியுள்ளது.

இன்று கெலிஓயா எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்த எரிபொருள் பௌசரை பரிசோதித்த போது அதில் தண்ணீர் இருந்ததைக் கண்டறிந்த போது, ​​எரிபொருளைப் பெற வந்தவர்கள் எரிபொருளைப் பயன்படுத்தத் தயக்கம் காட்டியுள்ளதுடன், அமைதியின்மையும் நிலவியுள்ளது.

இதன்போது பேராதனை பொலிஸார் தலையிட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து , பெனிதெனியாவில் உள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மத்திய பிராந்திய காரியாலயத்திற்கு குறித்த எரிபொருட்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) மத்திய பிராந்திய அலுவலகத்தின் சேமிப்பக அத்தியட்சகர் அதுல ஹேரத் தெரிவிக்கையில்,

 “எண்ணெய் பௌசர்களில் இது ஒரு சாதாரண விடயம். எரிபொருள் பௌசரின் முதல் பகுதியில் சிறிதளவு தண்ணீர் இருக்கும், அதனை எரிபொருள் தாங்கிகளில் இருந்து அகற்றி எஞ்சிய எரிபொருளை பயன்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து எரிபொருள் களஞ்சியசாலை எரிபொருளைப் பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்திருந்த போதிலும், பொதுமக்களின் எதிர்ப்பினால் பெனிதெனியா கிளைக்கு எரிபொருள் மீள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.