இலங்கையில் தொடரும் நெருக்கடி நிலை காரணமாக முன்பதிவுகளை இரத்து செய்யும் சுற்றுலாப்பயணிகள்!

Nila
2 years ago
இலங்கையில் தொடரும் நெருக்கடி நிலை காரணமாக முன்பதிவுகளை இரத்து செய்யும் சுற்றுலாப்பயணிகள்!

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்வதற்காக முன்பதிவு செய்த பல வெளிநாட்டவர்கள் அதனை இரத்து செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடியே அதற்கான காரணம் என கூறப்படுகின்றது.

35 முதல் 40 வீதமான வெளிநாட்டவர்கள் தமது முன்னைய முன்பதிவுகளை இரத்து செய்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்கா விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு இதுவரை வந்த பெரும்பாலான வெளிநாட்டவர்கள் பெரிய அளவில் நெருக்கடியை சந்திக்கவில்லை என்றே இலங்கை வந்து சென்றவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சில வெளிநாட்டவர்கள் இலங்கையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் உட்பட கலந்து கொண்டிருந்தனர். ஒகஸ்ட் மாதத்தில் சராசரி தினசரி சுற்றுலாப் பயணிகளின் வருகை 6,000 ஆக காணப்படும் என நினைத்தோம்.

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என மார்ச் மாதத்தில் நம்பினோம். எனினும் நாட்டில் நிலவும் மின்சாரம், எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடி காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை எதிர்பாராத வகையில் வீழ்ச்சியடைந்துள்ளது.

அத்துடன் முன்பதிவு செய்தவர்கள் அதனை இரத்து செய்திருப்பது நாட்டிற்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்கா விஜேசிங்க தெரிவித்துள்ளார்.