ஜனாதிபதி முன்னிலையில் இன்று பதவி பிரமாணம் செய்துக்கொள்ளும் அமைச்சர்கள்!

Nila
2 years ago
ஜனாதிபதி முன்னிலையில் இன்று பதவி பிரமாணம் செய்துக்கொள்ளும் அமைச்சர்கள்!

இன்றைய தினம் பத்து அமைச்சரவை அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசாங்கத்துடன் இணைந்துள்ள ஏனைய அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களைச் சேர்ந்த பத்து அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, சுயேச்சைக் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் சுசில் பிரேம ஜயந்த, அனுர பிரியதர்ஷன யாப்பா, ஜனாதிபதி விஜயதாச ராஜபக்ஷ, டிரான் அலஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஜீவன் தொண்டமான், ஈபிடிபி தலைவர் டக்ளஸ் தேவானந்தா, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கமைய, சுகாதார அமைச்சராக நிமல் சிறிபால டி சில்வாவும், விவசாய அமைச்சராக மஹிந்த அமரவீரவும், கல்வி அமைச்சராக சுசில் பிரேம ஜயந்தவும், நீதி அமைச்சராக விஜயதாச ராஜபக்ஷவும், மக்கள் பாதுகாப்பு அமைச்சராக டிரான் அலஸ் ஆகியோர் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட 25 உறுப்பினர்களுக்கு அமைச்சரவை வரையறுக்கப்பட்டுள்ளது, அவர்களில் நான்கு பேர் ஏற்கனவே பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

ஏனைய ஏழு பேர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து நியமிக்கப்படுவார்கள் என தெரியவருகிறது.

அவர்கள் எதிர்வரும் நாள் ஒன்றில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளனர். இதேவேளை, 30 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

எப்படியிருப்பினும் அமைச்சர்களுக்கு சம்பளம் பெறாமல் இருப்பதற்கு புதிய அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக பிரதமர் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.