இலங்கைக்கு உதவுவதாக ஜி-7 நாடுகள் வெளியிட்ட அறிவிப்புக்கு பிரதமர் ரணில் வரவேற்பு!

Nila
2 years ago
 இலங்கைக்கு உதவுவதாக ஜி-7 நாடுகள் வெளியிட்ட அறிவிப்புக்கு பிரதமர் ரணில் வரவேற்பு!

கடன் நிவாரணங்களை பெறுவதற்கு இலங்கைக்கு உதவுவதாக ஜி-7 நாடுகள் வெளியிட்ட அறிவிப்புக்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இலங்கையுடனான சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான ஈடுபாடு, பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு முக்கியமானதாகும் என்று ட்விட்டர் பதிவு ஒன்றின் மூலம் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

கடன் நிவாரணங்களை பெறுவதற்கு இலங்கைக்கு உதவி வழங்க ஜி-7 நாடுகள் முன்வந்துள்ளன.
உலக வல்லரசுகளின் அமைப்பான ஜி-7 நாடுகளின் நிதியமைச்சர்களது மாநாடு ஜேர்மனியில் இடம்பெறுகிறது.

அந்த மாநாட்டில் இணங்கப்பட்ட கடித வரைவு ஒன்றில், இலங்கை பெற்றுள்ள கடன்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கு ஒத்துழைப்பு வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடன்களை திருப்பிச் செலுத்துவதை இடைநிறுத்தியுள்ள நிலையில், இலங்கைக்கான உதவிகளை வழங்க ஜி-7 நாடுகள் ஊக்குவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சர்வதேச நாணய நிதியத்துடனான வினைத்திறனான பேச்சுவாத்தைக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்.
அத்துடன் இலங்கைக்கு கடன் வழங்கிய செல்வந்த நாடுகள், கடன் நிவாரணத்தை வழங்க வலியுறுத்தப்படுவதுடன், பெரு நன்கொடை அமைப்பான 'பரிஸ்க்லப்' ஊடாக இலங்கைக்கு உதவிகளை வழங்கவும் ஜி-7 நாடுகள் எதிர்ப்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.