இலங்கையின் நெருக்கடிக்கு உரிய காலத்தில் சரியான தீர்விற்கு நடவடிக்கை: சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர்

Mayoorikka
2 years ago
இலங்கையின் நெருக்கடிக்கு உரிய காலத்தில் சரியான தீர்விற்கு நடவடிக்கை: சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர்

இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிக்கு உரிய காலத்தில் சரியான தீர்வைக் கண்டறிவதை முன்னிறுத்தி அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடல்களை முன்னெடுத்துவருவதாக சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் கெரி ரைஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கு அமைவாக இலங்கை அவசியமான உதவிகளை வழங்குதற்குத் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

இம்மாதம் 9 ஆம் திகதி தொடக்கம் 23 ஆம் திகதிவரை இலங்கையுடனான தொழில்நுட்பமட்டக் கலந்துரையாடல்கள் இடம்பெறும் என்றும், அதன்மூலம்  புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டவுடன் கொள்கைமட்டப்பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்குத் தயாரான நிலையில் இருக்கமுடியும் என்றும் ஏற்கனவே சர்வதேச நாணயம் அறிவித்திருந்தது.

தற்போதையை சூழலில்  இலங்கை அதிகாரிகளுடன் தொழில்நுட்ப மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதுடன் அது எதிர்வரும் 24 ஆம் திகதிவரை தொடரும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ள அவர், எனவே இலங்கை தற்போது முகங்கொடுத்துள்ள நெருக்கடிகளுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கு அமைவாக உதவிகளை வழங்க எப்போதும் தயார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.