ஜனாதிபதி கோட்டாபய முன்னிலையில் இன்று மேலும் சில அமைச்சர்கள் பதவியேற்பு?

Nila
2 years ago
ஜனாதிபதி கோட்டாபய முன்னிலையில் இன்று மேலும் சில அமைச்சர்கள் பதவியேற்பு?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில்புதிய அமைச்சரவையில் மேலும் சில அமைச்சர்கள் இன்றைய தினம் பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

22 அமைச்சர்கள் அடங்கியதாக இந்த புதிய அமைச்சரவை இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் குறிப்பிடுகின்றன. ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டதன் பின்னர் 4 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

அதன்பின்னர் மேலும் 9 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். இதற்கமைய பிரதமர் தலைமையிலான புதிய அமைச்சரவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 14 ஆக காணப்படுகின்றது.அண்மையில் அமைச்சர்களாக நியமனம் பெற்றவர்களில், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நிமல் சிறிபால டி சில்வா, ஐக்கிய மக்கள் சக்தியின் ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் அடங்குகின்றனர்.

அத்துடன் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி மற்றும் சுயாதீன நாடாளுமன்ற குழுவின் சுசில் பிரேம ஜயந்த, நளின் பெர்னாண்டோ ஆகியோரும் புதிய அமைச்சரவையில் இடம்பெறுகின்றனர்.

இதுதவிர நாடாளுமன்றில் சுயாதீனமானமாக செயற்படும் நாடாளுமன்ற குழுவின் டிரான் அலஸ் மற்றும் விஜயதாஸ ராஜபக்ஸ ஆகியோரும் அடங்குகின்றனர்.

இதேவேளை, 21ம் அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பான யோசனை அமைச்சரவையில் இன்று முன்வைக்கப்படவுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

குறித்த சட்டமூலம் தொடர்பில் சட்டமா அதிபருடன் தற்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

அதனை, அமைச்சரவையில் சமர்ப்பித்ததன் பின்னர் மீண்டும் சட்டமா அதிபரின் அனுமதி பெற்று வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை எடுப்பதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ குறிப்பிட்டார்.