கச்சதீவினை குத்தகைக்கு வழங்குவது தொடர்பில் டக்ளஸ் வெளியிட்ட தகவல்!

Mayoorikka
2 years ago
கச்சதீவினை குத்தகைக்கு வழங்குவது  தொடர்பில் டக்ளஸ் வெளியிட்ட தகவல்!

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை விரும்பியவர்கள் சிறுபான்மை தலைவர்களே என்று டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

வவுனியாவில் இடம்பெற்ற கட்சியின் வட்டார அமைப்பாளர்களின் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கச்சதீவினை குத்தகைக்கு வழங்குவது தொடர்பாக உத்தியோகபூர்வ தகவல்கள் ஏதும் வழங்கப்படவில்லை. அவ்விடயம் அரசியலிற்காக பேசப்பட்ட விடயமோ தொரியாது, ஆனால் இது தொடர்பாக எந்த கலந்துரையாடலும் நடைபெற்றதாக தெரியவில்லை. 

அவ்வாறு கச்சதீவினை இந்தியாவிற்கு வழங்கக்கூடிய சூழ்நிலை ஏற்படாது.

21வது சீர்திருத்தமானது நாட்டினுடைய பாராளுமன்றத்திற்கும் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதிக்கும் இடையிலான அதிகாரங்களை பற்றியதாகும். அந்த வகையில் 13வது சீர்திருத்தமும் 21வது சீர்திருத்தமும் சம்மந்தப்பட்டதல்ல.

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையினை தமிழ் தேசிய தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம், அல்லது மலையக மக்களுடைய  தலைவர் தொண்டமான், முஸ்லிம் மக்களுடைய தலைவர் அஷ்ரப் ஆகியோர் இருந்த காலக்கட்டத்தில் வலியுறுத்தி வந்தனர்.

அதாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையானது சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பானதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும் என கூறியிருந்தனர்.

மேலும், மீனவர்களுடைய பிரச்சனை இயன்றளவு தீர்ப்பதற்கான முயற்சிகள்  எடுக்கப்படும். மேலும்   வடமாகாண  மீனவர்களிற்கு இந்திய மீனவர்களின் இழுவை படகுகளினுடைய அத்துமீறிய மீன்பிடிப்பு மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் காரணமாக வளங்கள் அழிக்கப்படுதல். போன்றவை பாரிய பிரச்சனைகளாக காணப்படுகின்றது. அத்தோடு கடற்றொழிலாளர்களுடைய தொழில் உபகரணங்கள் அழிக்கப்படுகின்றது.

இவ்வாறான பிரச்சனைக்கு ஓரளவு தீர்வு கண்டு வருகின்றோம். அதேபோன்று எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வும் எட்டப்படவுள்ளதாக தெரிவித்தார்.