ஜோன்ஸ்டனின் கடவுச்சீட்டு அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிப்பு!

Prabha Praneetha
2 years ago
ஜோன்ஸ்டனின் கடவுச்சீட்டு அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிப்பு!

கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கம தாக்குதல் வழக்குகள் தொடர்பாக வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் இதுவரையில் தமது கடவுச்சீட்டை நீதிமன்றில் சமர்ப்பிக்கவில்லை என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஆயிஷா ஜினசேன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வழக்கு கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான பவித்ரா வன்னியாராச்சி, நாமல் ராஜபக்ஷ, சஞ்சீவ எதிரிமான்ன மற்றும் ரோஹித அபேகுணவர்தன ஆகியோர் தமது கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைத்துள்ளனர் என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

எனினும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், மஹிந்த கஹந்தகம மற்றும் பலர் இதுவரையில் தமது கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சந்தேகநபர் சனத் நிஷாந்தவின் கடவுச்சீட்டு வழக்கு ஒன்று தொடர்பில் வேறு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் ரேணுகா பெரேரா ஆகியோர் தமது கடவுச்சீட்டுகள் அழிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் தெரிவித்துள்ளனர்.