ஆட்டோக்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்
எரிபொருளுக்காக விலைச் சூத்திரமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டால் முச்சக்கர வண்டிகளுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென முச்சக்கரவண்டி ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள மேற்படி சங்கத்தின் செயலாளர் நிஷாந்த குமார, எரிபொருள் விலைச் சூத்திரம் ஒன்றை அரசாங்கம் கொண்டுவருமானால் மீட்டர் பொருத்தப்பட்டுள்ள முச்சக்கர வண்டிகளுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பது அவசியம்.
எரிபொருள் விலை அதிகரிக்கும் போது மீட்டரில் கட்டணத்தை மாற்றுவதற்காக ஒரு தடவைக்கு ஒரு முச்சக்கர வண்டிக்காக 200ரூபாயை செலவிட வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை எரிபொருளின் விலை ஒவ்வொரு தடவையும் அதிகரிக்கப்படும் போது முச்சக்கர வண்டி சாரதிகள் பெரும் அசௌகரியங்களை எதிர் கொள்ள வேண்டி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இத்தகைய காரணங்களை கவனத்திற் கொண்டு எரிபொருளுக்காக விலைச் சூத்திரம் நடைமுறைப்படுத்தப்பட்டால் முச்சக்கர வண்டிகளுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.