ஜே.வி.பி அரசாங்கம் அமைந்தால் அன்றுமுதல் இலங்கைக்கு டாலர்கள் வரும் - JVP அறிவிப்பு
ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) தாம் அரசாங்கத்தை அமைக்கும் போது தம்மால் பில்லியன் கணக்கான வெளிநாட்டு வருமானத்தை ஈட்ட முடியும் என்று கூறியுள்ளது.
நாளை அரசாங்கத்தை பொறுப்பேற்றால் மாதாந்தம் வெளிநாடுகளில் இருந்து 1.5 முதல் 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஜேவிபியினரால் பெற்றுக்கொள்ள முடியும் என ஜேவிபியின் பிரதம செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
பொதுக்கூட்டமொன்றின் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜே.வி.பி கட்சியின் வெளிநாட்டு அலுவலகங்கள் ஊடாக இந்த வேலைத்திட்டத்தை ஒருங்கிணைக்கும்.கட்சியின் வெளிநாட்டு அலுவலகங்கள் வெளிநாட்டு ஊழியர்களை உத்தியோகபூர்வ வழிகள் மூலம் வருமானத்தை செலுத்த ஊக்குவிக்க முடியும் என்று டில்வின் சில்வா கூறினார்.
தற்போதைய நெருக்கடியை சமாளிப்பதற்கான வேலைத்திட்டம் ஜே.வி.பியிடம் இருப்பதாகத் தெரிவித்த அவர், ஜனாதிபதி அதனைப் புறக்கணித்துள்ளார்.
“மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை இராஜினாமா செய்த பின்னர், நாங்கள் ஊடகவியலாளர் சந்திப்பிற்கு அழைப்பு விடுத்து இடைக்கால பதவியில் அரசாங்கத்தை கைப்பற்றுவதற்கு நாங்கள் தயார் என அறிவித்தோம்.
சபாநாயகர் தற்காலிக ஜனாதிபதியாக வருவதற்கு வழி வகுக்கும் ஒரு நிபந்தனையாக நாங்கள் அரச தலைவரை பதவி விலகுமாறு கோரினோம், ”என்று அவர் கூறினார்.
தேசிய மக்கள் சக்திக்கு பாராளுமன்றத்தில் மூன்று உறுப்பினர்கள் இருந்தாலும், அமைச்சரவையை அமைப்பதற்கு இன்னும் சிலரது ஆதரவைப் பெறுவார்கள் என நம்புவதாக டில்வின் சில்வா மேலும் தெரிவித்தார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கும், பொதுமக்களுக்கு சலுகைகளை வழங்குவதற்கும், 6 மாதங்களில் தேர்தலை நடத்துவதற்கும் பிரேரணையை கொண்டு வருவதற்கு ஜே.வி.பி எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.