சிறையில் அடைக்கப்பட்ட வெளிநாட்டு குடியுரிமை கொண்ட குடும்பஸ்தர்! முல்லைத்தீவில் சம்பவம்

முல்லைத்தீவு - மாங்குளம் நீதவான் நீதிமன்றத்தில், நீதிபதி மற்றும் நீதிமன்றத்தினை அவமதித்து பேசிய குற்றத்திற்காக வெளிநாட்டு குடியுரிமை கொண்ட நபரை எதிர்வரும் 07.06.2022 வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கடந்த 31.05.2022 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தின் மீது தாக்குதல் நடத்திய சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டு குடியுரிமையினை கொண்ட பொக்கணை பகுதியினை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் 01.06.2022 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது மாங்குளம் நீதிமன்றில் நீதிபதியையும் நீதிமன்றத்தினையும் அவமதித்து பேசியுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.
இதையடுத்து, குறித்த சந்தேகநபரை எதிர்வரும் 07.06.2022 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.



