இன்றுடன் கையிருப்பில் உள்ள சமையல் எரிவாயு கொள்கலன்களின் விநியோகம் நிறைவு
இன்றுடன் கையிருப்பில் உள்ள சமையல் எரிவாயு கொள்கலன்களின் விநியோகம் முடிவடைவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் 16,000 வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்கள் மாத்திரம் விநியோகிக்கப்பட உள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
எரிவாயு கொள்கலன் விற்பனை முகவர்கள் தொடர்பான விபரங்களை தமது இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என்றும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
2,500 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நாட்டை வந்தடைய உள்ளது.
இதையடுத்து, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறும் என லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
எனவே, இன்றைய தினத்தின் பின்னர் மீண்டும் எரிவாயு விநியோகம் இடம்பெறும் நாள் வரையில், பொதுமக்கள் எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக, வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.