இந்தியாவிலிருந்து ஆனந்த நாகேஸ்வரன் குழு இலங்கை வருகிறது

இலங்கைக்கு மேலதிக பொருளாதார உதவிகளை மேற்கொள்ளும் வகையில், கள நிலைமைகளை மதிப்பிடுவதற்காக முக்கிய பொருளாதார ஆலோசகர் வி. ஆனந்த நாகேஸ்வரன் தலைமையில் இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட குழுவொன்று விசேட விமானம் மூலம் நாளை இலங்கைக்கு வரவுள்ளதாக கொழும்பின் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மூன்று மணித்தியாலங்கள் மாத்திரம் இலங்கையில் தங்கியிருக்கும் இந்த குழுவினர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரையும் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவுள்ளனர்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருடன் ஜூன் 20 அன்று புதுடில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட நடத்திய சந்திப்பின் அடிப்படையில் இந்த பயணம் அமையவுள்ளது.
இலங்கைக்கு எண்ணெய் கொள்வனவு செய்வதற்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்க இந்தியா தயாராகி வரும் நிலையிலேயே இந்த பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



