ஈரானில் 105 பேருக்கு தூக்கு தண்டனை - வருத்தம் தெரிவிக்கும் ஐநா
ஈரான் நாட்டில் இந்த வருடம் ஜனவரி மாதத்திலிருந்து மார்ச் மாதம் வரை சிறுபான்மையினர் 105 பேர் தூக்கிலிடப்பட்டிருக்கிறார்கள் என்று ஐநா வருத்தம் தெரிவித்திருக்கிறது.
ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான பேரவை கூட்டமானது, ஜெனிவாவில் நடந்தது. அப்போது ஐநாவின் பொது செயலாளரான ஆண்டனியோ குட்டரஸ் ஈரானில் அவசியமில்லாமல் மரண தண்டனைகள் விதிக்கப்படுவது பற்றிய ஒரு அறிக்கையை தாக்கல் செய்திருந்தார். இது பற்றி கூறிய பேரவை துணை தலைவரான நடா அல்-நசீப், கடந்த 2020 ஆம் வருடம் 260 நபர்கள், கடந்த வருடத்தில் 310 நபர்கள் இவ்வாறு தூக்கிலிடப்பட்டிருக்கிறார்கள்.
இந்த வருடமும் அதே போல் தொடர்கிறது என்று வருத்தம் தெரிவித்தார். மேலும் அண்டனியோ குட்டரேஸ் தன் அறிக்கையில் தெரிவித்திருந்ததாவது, ஈரானில் சிறுபான்மையினர் தான் அதிகமாக தூக்கிலிடப்படுகிறார்கள். மேலும் மரண தண்டனை கடுமையான குற்றங்கள் செய்யாதவர்களுக்கும் வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்நாட்டில் நியாயமான முறையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதில்லை எனவும் சர்வதேச சட்டத்தை மீறி சிறுவர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்படுவது தொடர்கிறது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனினும், ஈரான் தரப்பில் இந்த குற்றச்சாட்டுகள் மறுக்கப்பட்டுள்ளது. இது ஒரு தலைப்பட்சமான குற்றச்சாட்டு என்றும் ஈரான் கூறியிருக்கிறது.



