ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி

ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபராக இருந்த ஷேக் கலிபா கடந்த மே 13-ம் தேதி காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்திருந்தார்.
இந்தியாவும் ஒரு நாள் துக்கம் அனுசரித்தது. இதற்கிடையே, ஜெர்மனியின் எல்மாவ் நகரில் நடைபெற்ற ஜி-7 நாடுகள் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
மாநாடு நிறைவடைந்ததும் அங்கிருந்து கிளம்பி, இந்தியா வரும் வழியில் பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் சென்றார்.
அபுதாபி விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடியை ஐக்கிய அரபு அமீரகத்தின் தற்போதைய அதிபர் ஷேக் முகம்மது பின் சையது அல் நஹ்யான் வரவேற்றார்.
இருதரப்பு உறவுகள் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். அப்போது அமீரகத்தின் முன்னாள் அதிபர் ஷேக் கலீபா பின் ஜாயித் அல் நஹ்யானின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.
இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டார். அவரை தூதரக அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.



