எரிபொருள் நெருக்கடியால் முற்றாக முடங்கப்போகும் இலங்கை!!
எரிபொருள் நெருக்கடி காரணமாக எதிர்வரும் வாரத்தில் இருந்து நாடு முற்றாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அரசாங்கம் உத்தியோகபூர்வமாக முடிவு செய்யாவிட்டாலும், நாடு முற்றாக முடங்கும் அபாயத்தில் உள்ளதாக வார இறுதி தேசிய பத்திரிகையொன்றை மேற்கோள்காட்டி குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
பொதுப் போக்குவரத்துச் சேவைப் பேருந்துகள் மட்டுமன்றி சுகாதாரம், கல்வி போன்ற சேவைகளை பராமரிக்க முடியாத அளவுக்கு எரிபொருள் நெருக்கடி மோசமடைந்துள்ளது.
அத்தியாவசிய சேவைகளைக் கூட பராமரிக்க முடியாத அளவுக்கு எரிபொருள் நெருக்கடி நாட்டை பாதித்துள்ளதாகவும், ஒரு தொகை எரிபொருள் இறக்குமதி செய்யப்படும் வரை இந்நிலை தொடரும் எனவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த வாரம் டீசல் கப்பலொன்றும், 22ஆம் திகதி பெட்ரோல் கப்பலொன்றும் இலங்கைக்கு வரவுள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.